கூட்டுறவு பணியாளர்கள் சங்கம் சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்

உத்திரமேரூர்: உத்திரமேரூரில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில், மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நேற்று நடைபெற்றது. இதில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்க விற்பனையாளர்களிடம் அபராத தொகையாக இரு மடங்கு வசூலிப்பதை பணியாளர்களின் நலன் கருதி ரத்து செய்திட வலியுறுத்தியும், கூட்டுறவு நியாய விலை கடைகளில் கட்டுப்பாடற்ற பொருட்களை அதிகமாக இறக்கி விற்பனை செய்ய குறியீடு நிர்ணயம் செய்வதை கைவிட வலியுறுத்தியும், மேலும் தமிழகம் முழுவதும் நியாய விலை கடை விற்பனையாளர்களை சொந்த மாவட்டத்திலும் குறைந்தது 10 கிலோமீட்டர் தூரத்திற்கு அவர்களுடைய குடும்பம் உள்ள ஒன்றியத்திலேயே மாற்றி தர தமிழக அரசு ஆணையிட வலியுறுத்தியும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த போராட்டத்தில், மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும், கோரிக்கைகள் மீது அரசு உடனடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

The post கூட்டுறவு பணியாளர்கள் சங்கம் சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: