ஸ்ரீபெரும்புதூர் அரசு பள்ளியில் தேங்கிய மழைநீர்: மாணவர்கள் அவதி

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூரில் அரசு நடுநிலைப்பபள்ளி வளாகத்தில் தேங்கிய மழைநீரால், மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கட்சிப்பட்டு பகுதியில், ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 1 முதல் 8ம் வகுப்பு வரை சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ – மானவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், நேற்று பிற்பகல் ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது, இதன் காரணமாக கட்சிபட்டு அரசு பள்ளி வளாகத்தில் மழை நீர் தேங்கியது. மேலும் பள்ளி வளாகத்துக்கு வெளிப்புறத்தில், மழைநீர் வெளியேற முறையான வடிகால் வசதி இல்லாததால், மழைநீர் பள்ளி வளாகத்தில் தேங்கி நிற்கிறது. இதனால், வகுப்பறையில் இருந்து கழிவறைக்கு செல்லும் மாணவர்கள் அவதியடைந்து வருகின்றனர்.

ஒவ்வொரு மழையின்போதும் இதே நிலையில் தான் உள்ளது என்று மாணவர்களின் பெற்றோர் குற்றம்சாட்டி வருகின்றனர். எனவே, பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கி நிற்காதவாறு, ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவர்களின் பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து, ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பாலாஜியை தொடர்புகொண்டு கேட்டதற்கு, பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அங்கு புதிய சாலை அமைக்கப்பட்டது. அப்போது, சாலையோரம் இருந்த கால்வாய் சேதமடைந்துள்ளது. இதனால், பள்ளி வளாகத்தில் தேங்கி நிற்கும் மழைநீர் வெளியேற வழியின்றி உள்ளன. இதுகுறித்து பேரூராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

The post ஸ்ரீபெரும்புதூர் அரசு பள்ளியில் தேங்கிய மழைநீர்: மாணவர்கள் அவதி appeared first on Dinakaran.

Related Stories: