மறைமலைநகர் ஸ்ரீவாரி நகரில் சிறுவர் பூங்காவில் தேங்கிய மழைநீர்: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

செங்கல்பட்டு: சிங்கப்பெருமாள் கோயில் அருகே சிறுவர் பூங்காவில் மழைநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதால், அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட 20வது வார்டு ஸ்ரீவாரி நகரில், கடந்த 2022ம் ஆண்டு கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.48.50 லட்சம் மதிப்பீட்டில் மின் விளக்குகள், விளையாட்டு உபகரணங்கள், சிசிடிவி கேமராக்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் கழிப்பறை வசதியுடன் கலைஞர் பெயர் கொண்டு, சிறுவர்கள் விளையாட்டு பூங்கா அமைக்கப்பட்டது. இந்த பூங்காவில், தற்போது விளையாட்டு சாதனங்கள் அனைத்தும் சிதிலமடைந்து காணப்படுகிறது.

அதேபோல, பூங்காவில் உள்ள கழிப்பறை முழுவதுமே அசுத்தம் நிறைந்து துர்நாற்றம் வீசுகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையின் காரணமாக, பூங்கா முழுவதுமே மழைநீர் சூழ்ந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக மழைநீர் தேங்கியுள்ளதால் அதில் கொசுக்கள் உற்பத்தியாக, அப்பகுதி முழுவதுமே துர்நாற்றம் வீசுகிறது. அதேபோல், 500 மீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டுள்ள அண்ணா பூங்கா உள்ளே செல்வதற்குகூட பாதை இல்லாமல், அதை சுற்றி மழைநீர் தேங்கியுள்ளது. எனவே, மறைமலைநகர் நகராட்சி சார்பில் மழைநீரை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் எனவும், பூங்காவில் உள்ள விளையாட்டு சாதனங்களை சரி செய்து தரவேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post மறைமலைநகர் ஸ்ரீவாரி நகரில் சிறுவர் பூங்காவில் தேங்கிய மழைநீர்: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: