அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு: சாவில் சந்தேகம் இருப்பதாக மனைவி புகார்

திருவள்ளூர்: அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர் திடீரென மயங்கி விழுந்து பலியானார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறி விசாரணை நடத்த வேண்டும் என மனைவி போலீசில் புகார் கொடுத்துள்ளார். திருவள்ளூர் அடுத்த பழைய திருப்பாச்சூர் எல்லையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் டில்லிபாபு (எ) சிங்கம் (35). இவர் உடல்நிலை சரியில்லாமல் திருவள்ளூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், நேற்றுமுன்தினம் மீண்டும் டில்லிபாபுவிற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அவரது வீட்டில் உள்ளவர்கள் சிகிச்சைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. பின்னர் அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

இதனை தொடர்ந்து, வீட்டிற்கு வந்த சிறிது நேரத்தில் டில்லிபாபு திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதனைத் தொடர்ந்து, மீண்டும் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உறவினர்களை வெளியே இருக்குமாறு கூறினர். இருப்பினும், சிறிது நேரத்தில் டில்லிபாபு இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக இறந்த டில்லிபாபுவின் மனைவி பிரீத்தி (26) தன் கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து பிரேத பரிசோதனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

The post அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு: சாவில் சந்தேகம் இருப்பதாக மனைவி புகார் appeared first on Dinakaran.

Related Stories: