தனியார் வேலைவாய்ப்பு முகாம்: கலெக்டர் தகவல்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்துடன் இணைந்து மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது இதில் கலந்து கொண்டு வேலைவாய்ப்பினை பெறலாம் என தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்துடன் இணைந்து 26.10.2024 அன்று செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டத்திலுள்ள மேல்மருவத்தூர் லட்சுமி பங்காரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 26.10.2024 அன்று குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்கள் துறை அமைச்சர் தலைமையில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் 200க்கும் மேற்பட்ட முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் மற்றும் திறன்பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு சுமார் 50000 பணிக்காலியிடங்களுக்கு நிரப்பிட தங்களுக்கான மனிதவள தேவைக்குரிய நபர்களை, நேர்முகத் தேர்வினை நடத்தி தேர்வு செய்ய உள்ளார்கள். வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கு வேலைஅளிப்பவர் மற்றும் வேலை நாடுநர்களுக்கு அனுமதி முற்றிலும் இலவசம். மேலும் வேலையளிப்பவர் மற்றும் வேலைநாடுநர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிந்து கொள்ளலாம்.

இவ்வேலைவாய்ப்பு முகாமில் எட்டாம் வகுப்பு, 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, பட்டப்படிப்பு பி.இ., ஐடிஐ மற்றும் டிப்ளமோ, செவிலியர்கள், மருந்தாளுனர், ஆய்வக உதவியாளர்கள் போன்ற கல்வித்தகுதி உடைய வேலைநாடுநர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வேலைநாடுநர்களும் கலந்துகொண்டு வேலைவாய்ப்பினை பெறலாம்.

வயது வரம்பு 18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்கள் நகல்கள், சுயவிவர குறிப்பு (பயோடேட்டா) மற்றும் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் 26.10.2024 சனிக்கிழமை அன்று காலை 9 மணி முதல் 3 மணி வரை மேல்மருவத்தூர் லட்சுமி பங்காரு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு நேரில் வந்து வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு வேலைவாய்ப்பினை பெறலாம்.

இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் பணிநியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. மேலும் முகாம் தொடர்பான விவரங்களுக்கு 044-27426020 மற்றும் 6383460933 / 8056789359 என்ற எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post தனியார் வேலைவாய்ப்பு முகாம்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: