மக்கள் குறைதீர் கூட்டத்தில் பயனாளிகளுக்கு ஓட்டுநர் உரிமம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையத்தில் பிரதி திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அம்மனுக்கள் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கி தீர்வு காணப்பட்டு வருகிறது.

கூட்டத்தில் கலெக்டர் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து 322 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதன்படி, நேற்று நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 41 பயனாளிகளுக்கு வாகனம் ஓட்டுநர் உரிமங்களை மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வழங்கினார். பின்னர், பொதுமக்களிடம் மனுக்களை பெற்று, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

முன்னதாக, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், மிஷன் சக்தி குறித்த விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம், மாவட்ட சமூக நல அலுவலர் சியாமளா, அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post மக்கள் குறைதீர் கூட்டத்தில் பயனாளிகளுக்கு ஓட்டுநர் உரிமம் appeared first on Dinakaran.

Related Stories: