ஊத்துக்கோட்டையில் மோதலில் ஈடுபட்ட அரசுப்பள்ளி மாணவர்களுக்கு டிஎஸ்பி விழிப்புணர்வு

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பேரூராட்சி, திருவள்ளூர் சாலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் சுமார் 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த மாதம் பள்ளி முடிந்தும் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு பள்ளி மாணவர்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்கள் என இருதரப்பினரும் மீண்டும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர்.

இதுகுறித்து, தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஊத்துக்கோட்டை போலீசார் தகராறில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் 4 மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் ஒரு மாணவன் மட்டும் சிறையில் உள்ளதாக கூறப்படுகிறது. மற்ற 3 மாணவர்கள் எச்சரிக்கை விடுத்து அனுப்பப்பட்டனர். இதனையடுத்து, தகராறில் ஈடுபட்ட ஊத்துக்கோட்டை அரசுப்பள்ளி மாணவர்களிடம் ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சாந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். அப்போது, நான் 30 வயதில் குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று டிஎஸ்பியாக இங்கு வந்துள்ளேன்.

அதே போல் நீங்களும் பிளஸ் 2 தேர்வு முடிந்தவுடன் நல்ல முறையில் தேர்வு எழுதி ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆக வரவேண்டும். பஸ்களில் செல்லும்போது கெத்து காட்டுகிறேன் என நினைத்து பஸ்சில் உள்ள வயர்கள், இரும்பு கதவு, நாற்காலிகளை உடைத்து விடுகிறீர்கள். இதுபோன்ற செயலில் ஈடுபட்டால் உங்கள் மீது அல்ல உங்களின் பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்வோம் என பேசினார். இதில் மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி, தலைமையாசிரியர் ஜெயச்சந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

The post ஊத்துக்கோட்டையில் மோதலில் ஈடுபட்ட அரசுப்பள்ளி மாணவர்களுக்கு டிஎஸ்பி விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Related Stories: