சகஸ்ரபத்மாபுரம் கிராமத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்க வலியுறுத்தல்

ஆர்.கே.பேட்டை: சகஸ்ரபத்மாபுரம் கிராமத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆர்.கே.பேட்டை ஒன்றியம், சகஸ்ரபத்மாபுரம் கிராமத்தில் 100க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 4 நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால், இக்கிராம சாலையில் மழைநீர் செல்ல வழியின்றி பள்ளங்களில் தேங்கியுள்ளது. அதேபோல், கிராமத்திற்கு கழிவுநீர் கால்வாய் இல்லாததால் மழைநீருடன் கழிவு நீரும் கலந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதால் துர்நாற்றம் வீசுகிறது.

இதனால், சாலையில் நடந்து செல்பவர்கள், வாகனங்களில் செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, சகஸ்ரபத்மநாபபுரம் கிராமத்தில் கழிவுநீர் கால்வாய் அமைத்து தர வேண்டுமென பலமுறை ஒன்றிய அதிகாரிகளிடமும், ஊராட்சி மன்ற தலைவரிடம் முறையிட்டும், இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அது மட்டுமல்லாமல் அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் அங்கன்வாடி மையத்திற்குள்ளும் இந்த கழிவுநீர் செல்லும் நிலை இருப்பதால், பொதுமக்களின் வசதிக்காக கழிவுநீர் கால்வாய் அமைத்து தரவேண்டும் என அப்பகுதி மக்கள், மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

The post சகஸ்ரபத்மாபுரம் கிராமத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: