ஆன்லைன் வர்த்தகத்தில் அதிக லாபம் எனக்கூறி ரூ.14 கோடி மோசடி: 6 பேர் கைது

சென்னை: ஆன்லைன் வர்த்தகத்தில் அதிக லாபம் எனக்கூறி ரூ.14 கோடி மோசடி செய்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த ஏப்ரல் மாதம் சென்னையைச் சேர்ந்த நபரை வாட்ஸ்-அப் மூலம் மோசடி கும்பல் தொடர்பு கொண்டு முதலீடு செய்ய அழைத்துள்ளது.Black Rock என்ற நிறுவனத்தில் முதலீடு செய்தால் இரண்டே மாதத்தில் 500% லாபம் கிடைக்கும் என்று கூறி முதலீடு செய்ய வைத்துள்ளனர்.

Black Rock நிறுவனத்திற்கு SEBI அனுமதி இருப்பதாக கூறியும் மோசடி செய்துள்ளனர். BR IIFL PRo என்ற மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்ய வைத்து முதலீடு செய்யக்கூறியுள்ளனர். வாட்ஸ்-அப் மூலம் தொடர்புகொண்ட கும்பலை நம்பி செயலியை பதிவிறக்கம் செய்து முதலீடு செய்துள்ளார். முதலீடு செய்த பணம் திரும்ப கிடைக்காதபோது, தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து அதிர்ச்சியில் போலீசில் புகார் தெரிவித்தார்.

தேசிய சைபர் கிரைம் போர்டலில் புகார் அளித்ததன் பேரில் மாநில சைபர் கிரைம் பிரிவு வழக்கு பதிவு செய்தனர். மோசடி செய்யப்பட்ட பணம், வரவு வைக்கப்பட்ட 13 வங்கி கணக்குகள் உடனடியாக முடக்கம் செய்யப்பட்டன. மோசடி தொடர்பாக செங்கல்பட்டை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

சுப்பிரமணியன் வாக்குமூலத்தின் அடிப்படையில் சென்னை நீலாங்கரையைச் சேர்ந்த மதன், திருநின்றவூரை சேர்ந்த சரவணபிரியன் கைது. ஆவடி சதீஷ்சிங், புளியந்தோப்பை சேர்ந்த ஷாபகத், மதுரை மணிகண்டனை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். வடமாநில மோசடி கும்பலை சேர்ந்தவர்களை பிடிப்பதற்காக தமிழக சைபர் கிரைம் பிரிவு போலீசார் தனிப்படையும் அமைத்துள்ளனர்.

 

The post ஆன்லைன் வர்த்தகத்தில் அதிக லாபம் எனக்கூறி ரூ.14 கோடி மோசடி: 6 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: