கன்னிகைப்பேர் கிராமத்தில் நாகாத்தம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்

பெரியபாளையம்: பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் பிரசித்தி மிகப் பழமையான கிராம தேவதையான அருள்மிகு  நாகாத்தம்மன் கோயிலில் இன்று காலை மகா கும்பாபிஷேக விழா மிக சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக அனுக்ஞை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், கோ பூஜை, வாஸ்து சாந்தி, பிரவேச பலி, அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனம்,முதல் கால ஹோமம்,பூர்ணாஹூதி, தொடர்ந்து  நாகாத்தம்மன் பிரதிஷ்டை செய்தல் உள்பட பல்வேறு பூஜைகள், யாகங்கள் நடந்தன. இதைத் தொடர்ந்து இரண்டாம் கால யாக பூஜைகள், ஹோமங்கள் நடைபெற்று, பல்வேறு புண்ணிய நதிகள் இருந்து கொண்டு கலசங்களை யாகசாலையில் வைத்து சிறப்பு பூஜை செய்த பின், இன்று அதிகாலை கலச புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது.

இந்நிகழ்ச்சியில் மேளதாளங்கள் முழங்க, கலசங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கோவில் சுற்றி வலம் வந்தனர். பின்னர் ஆலய கோபுரத்தின் மீதுள்ள கலசத்துக்கு சிவாச்சாரியார்கள் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். இதில் பங்கேற்ற ஏராளமான பக்தர்கள்மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மூலவருக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், ஜவ்வாது, தேன், பன்னீர், குங்குமம், மஞ்சள் போன்ற பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்து, மலர்கள் மற்றும் ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

இதில் பங்கேற்ற அனைத்து பக்தர்களுக்கும் கோயிலின் சார்பில் மஞ்சள், குங்குமத்துடன் அன்னதான பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இவ்விழாவில் எல்லாபுரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆ.சத்தியவேலு, மாவட்ட பிரதிநிதி கே.வி.வெங்கடாசலம், ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி உதயகுமார், ஒன்றிய கவுன்சிலர் ஜெயலட்சுமி குமார், சிவா, ஜி.வெங்கடேசன், வி.வெங்கடேசன், செல்வம் உள்பட ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் மற்றும் விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர். இன்று மாலை உற்சவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, மலர்களால் அலங்காரம் செய்து ஊஞ்சல் சேவையும், இதைத் தொடர்ந்து இரவு முக்கிய வீதிகள் வழியாக உற்சவர் அம்மனின் திருவீதியுலாவும் நடைபெறுகிறது.

The post கன்னிகைப்பேர் கிராமத்தில் நாகாத்தம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.

Related Stories: