தென்னூரில் 8,000 அழுகிய முட்டைகளை பயன்படுத்திய 2 பேக்கரிகளுக்கு ‘சீல்’

 

திருச்சி, அக். 19: திருச்சி தென்னூரில் உள்ள இரண்டு பேக்கரிகளில் பயன்படுத்தி 8,000 அழுகிய முட்டைகளை உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்து, அழித்து, சீல் வைத்தனர். திருச்சி, தென்னூரில் பேக்கரிகடைகளில் பழைய மற்றும் கெட்டுபோன முட்டைகள் பயன்படுத்தி, தரமற்ற உணவு பொருட்களை விற்பனை செய்வதாக, உணவுப் பாதுகாப்பு துறையினருக்கு பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்துள்ளனர்.

இதையடுத்து, மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமையில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திருச்சி தென்னூர், ஆழ்வார்தோப்பு பகுதியில் உள்ள இரண்டு பேக்கரிகளில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, நாமக்கல்லில் இருந்து அழுகிய முட்டைகளை மொத்தமாக கொள்முதல் செய்து, கேக் மற்றும் பிரட்டுகள் தயார் செய்வதற்கு பயன்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து, அசாருதீன், கருணாகரன் ஆகிய இருவரது பேக்கரியில் தயாரிப்பு இடங்களில் வைக்கப்பட்டிருந்த 8,000 அழுகிய முட்டைகள், அழுகிய முட்டைகளை கொண்டு தயாரிக்கப்பட்ட 215 கிலோ கேக், பப்ஸ் உள்ளிட்ட உணவுப் பொருள்களை உணவுப் பாதுகாப்புத்துறையினர் பறிமுதல் செய்து அழித்தனர்.

தொடர்ந்து, அந்த இரண்டு பேக்கரி கடைகளுக்கு உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். மேலும், பேக்கரிகள் மீது உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. மேலும் தமிழக அரசால் தடைச்செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் மற்றும் கலப்படம் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் விற்றால் 9626839595, 9444042322 என்ற எண்களில் தகவல் தெரிவிக்கலாம் என்றனர்.

The post தென்னூரில் 8,000 அழுகிய முட்டைகளை பயன்படுத்திய 2 பேக்கரிகளுக்கு ‘சீல்’ appeared first on Dinakaran.

Related Stories: