கனமழை எச்சரிக்கை எதிரொலி; பக்தர்களின் வசதிக்கு இடையூறு இன்றி மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்: திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி உத்தரவு

திருமலை: கனமழை எச்சரிக்கையால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களின் வசதிக்கு எவ்வித இடையூறும் ஏற்படக்கூடாது என்று தேவஸ்தான செயல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார். திருமலை அன்னமய்யா பவனில் கூடுதல் செயல் அதிகாரி வெங்கையாசவுத்திரி தலைமையில் பேரிடர் மேலாண்மை குறித்து அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. இதில் திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி ஷியாமளாராவ் காணொலி காட்சி மூலம் பேசியதாவது:

திருமலை, திருப்பதியில் 48 மணி நேரத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள முன்னெச்சரிக்கையை கருத்தில் கொண்டு பேரிடரை எதிர்கொள்ள அனைத்து அதிகாரிகளும் தயாராக இருக்க வேண்டும். தீயணைப்புத்துறை, சுகாதாரத்துறை, கண்காணிப்புத்துறை மற்றும் பிற முக்கிய துறைகளின் தலைவர்கள் தங்கள் ஊழியர்களைக் கொண்டு பேரிடர் மேலாண்மை துரித நடவடிக்கை குழுவை அமைக்க வேண்டும். மலைப்பாதையில் மண் சரிவு ஏற்படும் இடங்களில் சிறப்பு கண்காணிப்பு மற்றும் மலைபாதை களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

மின்சாரம் தடைபடாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மின்தடை ஏற்பட்டால் ஜெனரேட்டர்களை இயக்க போதிய டீசல் முன்கூட்டியே இருப்பு வைக்க வேண்டும் பக்தர்களுக்கு தங்கும் வசதி, தரிசனம், பிரசாதம் போன்றவற்றுக்கு இடையூறு ஏற்படாத வகையில் மாற்று ஏற்பாடுகளை ஐடி துறை மேற்கொள்ள வேண்டும். போக்குவரத்து போலீசார், பொறியியல் பணியாளர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். ஏதேனும் அவசர சூழல் ஏற்பட்டால் தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட வேண்டும். வானிலை தகவல்களை உடனுக்குடன் புதுப்பிக்கவும், பக்தர்களை எச்சரிக்கும் வகையில் ஊடகம் மற்றும் தேவஸ்தான சமூக வலைதளங்கள் மூலம் செய்திகளை உடனுக்குடன் மக்கள் தொடர்பு துறைக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post கனமழை எச்சரிக்கை எதிரொலி; பக்தர்களின் வசதிக்கு இடையூறு இன்றி மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்: திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: