மாற்றுத்திறனாளிகள் விவகாரம் அனைத்து மாநிலங்கள் பதிலளிக்க நோட்டீஸ்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: மாற்றுத்திறனாளிகளை மதிப்பிடுவதற்கான மையங்கள் அமைக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு அனைத்து மாநிலங்களும் பதிலளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் தொடர்பான விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘‘நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகள் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறனர்.

எனவே அவர்களை மதிப்பீடு செய்வதற்கான சிறப்பு மையங்களை மாநிலங்கள் வாரியாக அமைக்க வேண்டும். மேலும் இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் ஒரு தீர்க்கமான வழிகாட்டுதல்களையும் உருவாக்க வேண்டும். இதுகுறித்து அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் மேற்கண்ட மனுவானது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘மாற்றுத்திறனாளிகள் தொடர்பான விவகாரம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், இதனை உச்ச நீதிமன்றம் உடனடியாக கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் விவகாரத்தில், அவர்களை மதிப்பீடு செய்வதற்கான மையங்களை அமைக்க வேண்டும்.

மேலும் அவர்களின் குறைகளை தீர்க்கும் விதமாக அடிக்கடி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டாலும், அது நிஜத்தில் நடைமுறைக்கு வராமல் அர்த்தமற்றவைகளாக உள்ளது.எனவே இதனை நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். இதையடுத்து அவரது கோரிக்கையை ஏற்பதாக தெரிவித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், ‘‘மாற்றுத்திறனாளிகளை மதிப்பிடுவதற்கான மையங்களை அமைப்பது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு அனைத்து மாநிலங்களும் பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டார்.

The post மாற்றுத்திறனாளிகள் விவகாரம் அனைத்து மாநிலங்கள் பதிலளிக்க நோட்டீஸ்: உச்ச நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: