அமைச்சரை குறிவைத்து தேர்தல் நெருங்கும் நிலையில் ராஞ்சியில் ஈடி திடீர் ரெய்டு: ஜார்க்கண்ட் அரசியலில் பரபரப்பு

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஹேமந்த் சோரன் தலைமையிலான கட்சி ஆட்சி செய்து வருகிறது. அங்கு விரைவில் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில், ஒன்றிய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தில் முறைகேடு நடந்தது தொடர்பான சட்டவிரோத பண பரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.

இந்த பண மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் மாநில குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மிதிலேஷ் குமார் தாக்கூரின் தனிப்பட்ட உதவியாளர், அமைச்சரின் சகோதரர், அரசியல் அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள், தொழிலதிபர்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரி மணீஷ் ரஞ்சன் உள்ளிட்டோருக்கான சொந்தமான ராஞ்சியில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். ஐஏஎஸ் அதிகாரி மணீஷ் ரஞ்சன், நிலம், சாலை, கட்டிடத் துறை அரசு செயலராக உள்ளார். ஏற்கனவே, முன்னாள் அமைச்சர் ஆலம்கீர் ஆலம் கைது செய்யப்பட்ட பணமோசடி வழக்கிலும் ரஞ்சன் அமலாக்கத்துறையால் விசாரிக்கப்பட்டுள்ளார்.

* தூக்கில் தொங்க தயார் பாஜவில் சேர மாட்டேன்
அமைச்சர் மிதிலேஷ் குமார் தாக்கூர் கூறுகையில், ‘‘பாஜவில் சேர மறுத்ததால் இந்த சோதனைகள் நடக்கின்றன. அரசியல் உந்துதலால் நடக்கும் ரெய்டுகள் இவை. ஒன்றிய அரசின் உத்தரவுப்படி அமலாக்கத்துறை செயல்படுகிறது. இந்த சோதனையில் எவ்வளவு பணம், பொருள் கைப்பற்றப்பட்டது என்பதை அமலாக்கத்துறை வெளியிட வேண்டும். அவற்றை அறியும் உரிமை மக்களுக்க உள்ளது. என்னை சிறையில் தள்ளினாலும், தூக்கிலிட்டாலும் பரவாயில்லை. ஆனால் பாஜவில் மட்டும் சேரமாட்டேன்’’ என்றார்.

 

The post அமைச்சரை குறிவைத்து தேர்தல் நெருங்கும் நிலையில் ராஞ்சியில் ஈடி திடீர் ரெய்டு: ஜார்க்கண்ட் அரசியலில் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: