வாலாஜாபாத் அருகே விபத்து பைக் மீது கார் மோதி தம்பதி பரிதாப பலி: மகன் திருமணத்துக்கு அழைப்பிதழ் கொடுக்கச் சென்றபோது சோகம்

வாலாஜாபாத்: வாலாஜாபாத் அருகே மகன் திருமணத்துக்கு அழைப்பிதழ் கொடுக்க சென்றபோது பைக் மீது கார் மோதி தம்பதி பரிதாபமாக உயிரிழந்தனர். வாலாஜாபாத் ஒன்றியம், தாங்கி கிராமத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி (60). இவர் மாநகர போக்குவரத்து ஓட்டுனராக பணியாற்றிவிட்டு ஓய்வு பெற்றவர். இவரது மனைவி பானுமதி (55). இவர்களது மூத்த மகனுக்கு அடுத்த மாதம் திருமணம் நடக்கவுள்ள நிலையில், உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுக்கும் பணியில் தம்பதி முழுவீச்சாக ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வாலாஜாபாத் அடுத்த மதுராநல்லூர் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு திருமண அழைப்பிதழ் வைப்பதற்காக மூர்த்தி மற்றும் அவரது மனைவி பானுமதி ஆகியோர் பைக்கில் சென்றுள்ளனர்.

அப்போது வாலாஜாபாத் ஒரகடம் சாலையையொட்டி கிராமத்திற்குச் செல்லும் சாலையை கடக்க முயன்றனர். அப்போது ஒரகடத்தில் இருந்து வாலாஜாபாத் நோக்கிச் சென்ற கார் இவர்களது பைக் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரையும் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் பலத்த காயங்களுடன் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று காலை இருவரும் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து வாலாஜாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மகன் திருமண நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் கொடுக்கச் சென்ற தாய், தந்தை இருவரும் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சுற்றுவட்டார கிராமங்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post வாலாஜாபாத் அருகே விபத்து பைக் மீது கார் மோதி தம்பதி பரிதாப பலி: மகன் திருமணத்துக்கு அழைப்பிதழ் கொடுக்கச் சென்றபோது சோகம் appeared first on Dinakaran.

Related Stories: