குடும்பத்தை தவிக்கவிட்டு ஓடியதால் ஆத்திரம் தங்கையின் தகாத உறவு காதலன் குத்திக்கொலை

*அண்ணன், கணவர் வெறிச்செயல்

திருமலை : குடும்பத்தை தவிக்கவிட்டு ஓடிய தங்கையின் கள்ளக்காதலனை அப்பெண்ணின் கணவரும், அண்ணனும் கத்தியால் குத்திக்கொலை செய்தனர்.தெலங்கானா மாநிலம் கோதாவரிகனியில் உள்ள சிங்கரேணி அரசு மருத்துவமனையில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தவர் வினய்(30). அதே பகுதியைச் சேர்ந்தவர் அஞ்சலி(25). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் வினய்க்கும், அஞ்சலிக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. கணவர், குழந்தைகளை மறந்துவிட்டு அஞ்சலி கள்ளக்காதலனுடன் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளார்.

இதையறிந்த அஞ்சலியின் கணவர் மற்றும் அண்ணன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அஞ்சலி காதலை கைவிடவில்லை. மேலும் காதலுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால், குழந்தை, கணவரை அஞ்சலி தவிக்கவிட்டுவிட்டு தனது தகாத உறவு காதலன் வினய்யுடன் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மாயமாகிவிட்டார்.இதையறிந்த வினய்யின் பெற்றோர் முதலில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் மகனின் விருப்பத்தை மறுக்க முடியாமல் இருவரையும் அவர்களின் விருப்பப்பப்படி ஹனுமன்நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்க வைத்திருந்தனர். அவர்களின் விவரம் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வைத்திருந்தனர்.

இதற்கிடையில் தனது தங்கை அஞ்சலி வெளியேறியதால் அவரது அண்ணன் கடும் ஆத்திரத்தில் இருந்தார். அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டார். விவரம் கிடைக்காததால் தனது தங்கைக்கு போன் செய்தார்.அப்போது, சத்துலபதுகம்மா திருவிழாவையொட்டி பிறந்த வீட்டின் ‘சீர்’ தர வேண்டும். அதனை பெற்றுக்கொண்டு நீ உன் விருப்பப்படி வாழலாம். ஆனால் நீ இருக்கும் இடம் தெரியாததால் சீர் கொடுக்க முடியவில்லை. எனவே வினய்யை நான் இருக்கும் இடத்திற்கு அனுப்பி வைத்தால் அவருடன் உனது வீட்டிற்கு வருவதாக கூறினார்.இதை உண்மை என்று நம்பிய அஞ்சலி, வினய்யிடம் தனது அண்ணனை அழைத்து வரும்படி கூறியுள்ளார்.

அதன்படி நேற்றுமுன்தினம் அஞ்சலியின் அண்ணன் தெரிவித்த இடத்திற்கு வினய் சென்றார். அப்போது அஞ்சலியின் அண்ணனும், கணவரும் அங்கு இருந்தனர். ஆனால் அஞ்சலியின் கணவர் என்பதை அறியாத வினய் இருவரையும் தனது வீட்டுக்கு அழைத்து வந்தார். வீட்டிற்கு அண்ணனுடன் தனது கணவரும் வந்திருப்பதை பார்த்த அஞ்சலி கடும் அதிர்ச்சி அடைந்தார். அப்போது இருதரப்புக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அஞ்சலியின் அண்ணனும், கணவரும் அஞ்சலியை வீட்டில் உள்ள ஒரு அறையில் தள்ளி பூட்டினர். பின்னர் வினய்யை இருவரும் சேர்ந்து சரமாரி தாக்கி அங்கிருந்த கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். பின்னர் 2 பேரும் தப்பியோடிவிட்டனர்.

சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். வினய் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் அஞ்சலியால்தான் தனது மகன் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதாக கூறி, வினய்யின் பெற்றோர் அஞ்சலியை தாக்க முயன்றனர். அவர்களிடம் இருந்து அஞ்சலியை போலீசார் பாதுகாப்பாக மீட்டனர். இதையடுத்து வினய் கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அஞ்சலியின் அண்ணன், கணவரை தேடி வருகின்றனர்.

The post குடும்பத்தை தவிக்கவிட்டு ஓடியதால் ஆத்திரம் தங்கையின் தகாத உறவு காதலன் குத்திக்கொலை appeared first on Dinakaran.

Related Stories: