தொடரும் விபத்துகளுக்கு பொறுப்பேற்று ஒன்றிய ரயில்வே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்: செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பாக்மதி விரைவு ரயில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. ஒடிசா பாலசோர் ரயில் விபத்தில் 293 பேர் மரணமடைந்து ஆயிரக்கணக்கானவர்கள் படுகாயமடைந்த நிகழ்விற்கு பிறகு ரயில் விபத்து ஏற்படாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ரயில்வே அமைச்சர் வாக்குறுதி வழங்கியிருந்தார்ஆனால் தொடர்ந்து இத்தகைய விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.

கடந்த 2014 முதல் 2023 வரை ஒன்றிய பாஜ ஆட்சியில் நடந்த ரயில் விபத்துகளில் 281 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 1543 பேர் படுகாயம் அடைந்திருக்கிறார்கள். இத்தகைய விபத்துகளை தடுப்பதற்கு தானியங்கி ரயில் பாதுகாப்பு அமைப்பான கவாச் பொருத்துவதற்கு நிதி ஒதுக்கப்படும் என்று ஒன்றிய பாஜ அரசு கூறியது. ஆனால் இதுவரை 1,465 கி.மீ. தான் கவாச் பொருத்தப்பட்டிருக்கிறது. ரயில் விபத்து குறித்து பிரதமர் மோடி இரங்கல் செய்தி வழங்குவதோடு தமது கடமையை முடித்துக்கொள்கிறார்.

ஆனால், ரயில் விபத்துக்களுக்கு யார் பொறுப்பு?. தமிழக மக்களுக்கு நன்றாக நினைவிருக்கும். 1956ல் அரியலூரில் நடந்த ரயில் விபத்திற்கு அன்றைய ரயில்வே அமைச்சர் லால் பகதூர் சாஸ்திரி பொறுப்பேற்று பதவியை விட்டு விலகிய முன்மாதிரியை நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். எனவே தொடர்ந்து நடைபெற்று வருகிற ரயில்வே விபத்துகளுக்கும், உயிர் இழப்புகளுக்கும், பாதிக்கபப்ட்டவர்களுக்கும் பொறுப்பேற்று ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ், அமைச்சர் பதவியில் இருந்து உடனடியாக விலக வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post தொடரும் விபத்துகளுக்கு பொறுப்பேற்று ஒன்றிய ரயில்வே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்: செல்வப்பெருந்தகை வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: