மேட்டூர் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக வீரப்பன் மகள் வித்யாராணி வீரப்பன் களமிறங்கியுள்ளார். தொகுதிக்குள் கிராமம் கிராமமாக சென்று தந்தை வீரப்பன் பெயரை கூறி, அவருக்காக எனக்கு ஓட்டு போடுங்கள் என பிரசாரம் செய்கிறார்.
தற்போது வித்தியாசமாக வீரப்பன் படத்துடன் கூடிய துண்டு பிரசுரத்துடன், மேச்சேரி ஓலப்பட்டி, தாதம்மூப்பன்காடு கிராம மக்களிடம் நேற்று, வெத்தலை, பாக்கு கொடுத்து வித்யாராணி வீரப்பன் ஓட்டு கேட்டார்.
அப்போது அவர் பேசுகையில், ‘‘எங்க அப்பாவை நினைத்து எனக்கு வாய்ப்பை தாருங்கள். அவரை போல நேர்மையாக இருப்பேன். மக்களுக்கு அப்பா நல்லது செய்திருக்கிறார். இந்த மண் எனக்கு நிறைய செய்திருக்கிறது. அதை நான் திருப்பி தர விரும்புகிறேன். இங்குள்ள தனியார் கம்பெனிகளில் நம்ம பசங்களுக்கு தான் வேலை என்பதை பெற்று தருவேன்.
அப்பா வீரப்பனுக்கு என தனியா பெயர் இருக்கு, அந்த அதிகாரத்தை நான் பெற்றுத்தருவேன். அதனால கொஞ்சம் ஞாபகம் வைத்துக்கோங்க, ஆதரவு தாருங்கள்,’’ என்றார். வீடு வீடாக சென்று மக்களுக்கு வெத்தலை, பாக்கு வைத்து வீரப்பனுக்காக வாக்கு போடுங்கள் என பிரசாரம் செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார்.
