மின்வாரியத்தில் தொழில்நுட்ப பணிகளுக்கு கேங்மேன்களை பயன்படுத்த தடை கோரி வழக்கு: டான்ஜெட்கோ பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: மின்வாரியத்தில் தொழில்நுட்ப பணிகளுக்கு கேங்மேன்களை பயன்படுத்தக் கூடாது என்று தொடரப்பட்ட வழக்கில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (டான்ஜெட்கோ) பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் சிறுசேரியை சேர்ந்த டி.வெண்ணிலா தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழ்நாடு மின்வாரியத்தில் கடந்த 4 ஆண்டுகளில் தொழில்நுட்ப பணிகளுக்கு திறன் சாராத கேங்மேன்களை பயன்படுத்தியதில் 70 பேர் மரணமடைந்துள்ளனர். மின்வாரியத்தில் தொழில்நுட்ப பணிகளில் பயிற்சி பெறாதவர்களை பயன்படுத்துவதால் அவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 100 பேர் மின் விபத்துகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை, மின்வாரியம் கடந்த 2 ஆண்டுகளாக பின்பற்றவில்லை. தொழில் நுட்ப பணிகளுக்கு கேங்மேன்களை பயன்படுத்துவதால் பணிகளில் சிக்கல் ஏற்படுகிறது. இதன் காரணமாக சமீபத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் கேங்மேன் ஒருவர் பலியாகி உள்ளார். எனவே, இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் பி.பி.பாலாஜி, ஜி.அருள் முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் எம்.வேல்முருகன் ஆஜராகி வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த மனுவுக்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் 2 வாரத்தில் பதிலளிக்குமாறு உத்தரவிட்டனர்.

The post மின்வாரியத்தில் தொழில்நுட்ப பணிகளுக்கு கேங்மேன்களை பயன்படுத்த தடை கோரி வழக்கு: டான்ஜெட்கோ பதில் தர ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: