அடித்து துவைத்த கனமழை..பாளையங்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் புகுந்த மழைநீர்

நெல்லை: நெல்லை பாளையங்கோட்டை பகுதியில் நேற்று பெய்த கனமழையால் ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் மழை நீர் புகுந்ததால் நோயாளிகள் பாதிக்கப்பட்டனர். அரபிக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நெல்லை மாநகரில் நேற்று மாலை முதலே மழை பெய்து வந்தது. மாலை தொடங்கிய மழை இரவு வரை நீடித்தது.

இதனால் மாநகரின் பல்வேறு இடங்களில் மழைநீர் அதிக அளவில் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். மேலும் நெல்லை சந்திப்பு, தச்சநல்லூர், பாளையங்கோட்டை டவுன், மேலப்பாளையம், கே.பி.கே.நகர், சமாதானபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இந்த நிலையில் நெல்லை பாளையங்கோட்டை மார்கெட் பகுதிகளில் உள்ள நகர்புற ஆரம்ப சுகாதாரநிலையத்தில் மழைநீர் சூழ்ந்தது.

மருத்துவமனையின் உள்பகுதிகளிலும், வெளி பகுதிகளிலும் தண்ணீர் அதிக அளவில் தேங்கியதால் சிகிச்சையில் இருந்தவர்கள், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், மருத்துவமனையில் இருந்தவர்கள் என அனைவரும் மிகுந்த சிரமத்திற்க்கு ஆளாகியுள்ளனர். மேலும் மருத்துவமனையில் இருந்தவர்கள் பாதுகாப்பாக வேறு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கபட்டனர். மாநகராட்சியில் இருந்து மின் மோட்டார் மூலம் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணிகள் நடைபெற்றது.

The post அடித்து துவைத்த கனமழை..பாளையங்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் புகுந்த மழைநீர் appeared first on Dinakaran.

Related Stories: