காய்கறி விலை உயர்வு எதிரொலி; பண்ணை பசுமை கடைகளில் குறைந்த விலையில் விற்பனை: தமிழ்நாடு அரசு நடவடிக்கைக்கு பொதுமக்கள் வரவேற்பு

சென்னை: காய்கறிகளின் விலை உயர்ந்ததை அடுத்து, பொதுமக்கள் நலன் கருதி கூட்டுறவுத்துறையின் மூலம் பண்ணை பசுமை கடைகளில் கொள்முதல் விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களாக காலநிலை மாற்றம் காரணமாக, தக்காளி காய்கள் பழுக்காமல் செடியிலேயே வெம்பி விட்டதால், காய்கறி சந்தைகளுக்கு வரத்து வெகுவாக குறைந்தது.

இதனால்,சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.90 க்கும் சில்லறை விற்பனையில் ரூ.110 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் வெங்காயம் மொத்த விற்பனையில் ரூ.60க்கு விற்பனை செய்யப்படுகிறது.மேலும் மழைக்காலம் வந்தாலே எளிதில் அழுகி விடக்கூடிய பீன்ஸ் விலை மொத்த விற்பனையில் ரூ.110 க்கும், சில்லறை விற்பனையில் ரூ.130 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. காய்கறிகளின் இந்த விலை உயர்வால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, பொதுமக்கள் நலன் கருதி தமிழ்நாட்டில் கூட்டுறவுத்துறையின் மூலம் செயல்பட்டு வரும் பண்ணை பசுமை நுகர்வோர் பசுமை கடைகள், நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் கொள்முதல் விலைக்கே தக்காளி மற்றும் இதர காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதற்காக மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் இருந்து கொண்டுவரப்பட்ட வெங்காயம், தேனாம்பேட்டை, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, அண்ணாநகர் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.40-க்கும், ஒரு கிலோ தக்காளி ரூ.49-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரம் ஒருவருக்கு அதிகபட்சம் 2 கிலோ மட்டும் வழங்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

The post காய்கறி விலை உயர்வு எதிரொலி; பண்ணை பசுமை கடைகளில் குறைந்த விலையில் விற்பனை: தமிழ்நாடு அரசு நடவடிக்கைக்கு பொதுமக்கள் வரவேற்பு appeared first on Dinakaran.

Related Stories: