புதுக்கோட்டையில் குரூப்-2, 2 ஏ தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

 

புதுக்கோட்டை,அக்.5: புதுக்கோட்டை மாவட்டம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு குரூப்-2 கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது என மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2024ம் ஆண்டிற்கான குரூப்2, 2ஏ போட்டித் தேர்வுக்கான அறிவிப்பில் 2327 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பை வெளியிட்டது. இதற்கான தேர்வானது 14.9.2024 அன்று நடைபெற்றது.

மேற்படி, குரூப்2, 2ஏ தேர்விற்கான முதன்மைத்தேர்வுக்கு கட்டணமில்லா நேரடி பயிற்சி வகுப்புகள் புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் சிறந்த வல்லுநர்களைக் கொண்டு வரும் 8ம்தேதி காலை 10.30 மணிக்கு தொடங்கப்பட உள்ளது. இப்பயிற்சியின் போது கட்டணமில்லா பாடக்குறிப்புகள் வழங்கப்படும். ஒவ்வொரு வாரமும் தேர்விற்கான மாதிரித் தேர்வுகள் நடத்தப்படும்.

எனவே போட்டித் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் போட்டித் தேர்வர்கள் இவ்வலுவலக நேரடி பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து கொள்ள தங்களது 2 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ஆதார் அட்டை நகல் மற்றும் குரூப் 2, 2ஏ விண்ணப்பித்த விண்ணப்ப நகல், தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு (Hall Ticket) உடன் வருகை புரியுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளில் சேருவது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரிலோ அல்லது 04322-222287 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை கலெக்டர் அருணா, தெரிவித்துள்ளார்.

The post புதுக்கோட்டையில் குரூப்-2, 2 ஏ தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு appeared first on Dinakaran.

Related Stories: