வீட்டின் பூட்டை உடைத்து 9 சவரன் நகை கொள்ளை: போலீசார் விசாரணை

குன்றத்தூர்: மாங்காடு அடுத்த பெரிய கொளுத்துவான்சேரி, அபிராமி நகர் பகுதியை சேர்ந்தவர் நிக்கில்ஜான் (35). அதே பகுதியில் சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இவரது, தங்கைக்கு திருமணம் செய்ய முடிவு செய்திருந்ததால் அவருக்கு நகைகள் வாங்குவதற்காகவும், வீட்டிலுள்ள பழைய நகைகளை எடுத்துச்சென்று உருக்கி புதிய நகைகளாக செய்வதற்கும் சுமார் 30 சவரன் நகைகளை எடுத்துக்கொண்டு, கடந்த சில நாட்களுக்கு முன்பு நிக்கில்ஜான் திருவனந்தபுரம் சென்றிருந்தார். அங்கு, தனது வேலைகளை முடித்துவிட்டு மீண்டும் நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வந்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டின் கதவின் இருந்த பூட்டுகள் அனைத்தும் உடைக்கப்பட்டு, கதவு திறந்த நிலையில் இருந்தது.

இதையடுத்து வீட்டிற்குள் சென்று பார்த்தபோது மர்ம நபர்கள் வீட்டிற்குள் நுழைந்து வீட்டின் பீரோவில் மறைத்து வைத்திருந்த 9 சவரன் தங்க நகைகளை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.இதனைகண்டு, அதிர்ச்சியடைந்த நிக்கில்ஜான் இதுகுறித்து மாங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், கொள்ளை சம்பவம் நடைபெற்ற வீட்டில் பதிவான கை ரேகை பதிவுகளையும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். தங்கைக்கு திருமணம் செய்வதற்காக வீட்டிலிருந்த பழைய நகைகளை உருக்கி புதிய நகைகள் செய்வதற்காக எடுத்து சென்றதால், 30 சவரன் தங்க நகைகள் அதிர்ஷ்டவசமாக தப்பியது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post வீட்டின் பூட்டை உடைத்து 9 சவரன் நகை கொள்ளை: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: