புன்னம்சத்திரம் அருகே காவிரி கூட்டுக் குடிநீர் குழாய் சேதம்: சீரமைக்க கோரிக்கை

 

க.பரமத்தி,செப்.18: புன்னம்சத்திரம் காலனி அருகே நெடுஞ்சாலையில் காவிரி கூட்டு குடிநீர் குழாய் உடைப்பை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். கரூர் மாவட்டம் க.பரமத்தி, அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி ஆகிய ஊராட்சி பகுதிகளுக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. காவிரி ஆற்றில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு அதிலிருந்து குழாய் மூலம் நொய்யல் வழியாக கொடுமுடி, கரூர் செல்லும் நெடுஞ்சாலையில் புன்னம்சத்திரம் வழியாக கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து சுற்றியுள்ள பல்வேறு ஊர்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

இதில், புன்னம்சத்திரம் காலனி அருகே காவிரி குடிநீர் குழாய் உடைந்து, கடந்த 3 மாதங்களுக்கு மேலாக தண்ணீர் வௌியேறி சாலையோரத்தில் தேங்குகிறது. இதனால், சாலைகளில் தேங்கும் நீர் மீண்டும் குழாய்வழியாக உள்ளே செல்கின்றது. இதனால், குடிநீர் மாசடைந்து, பொதுமக்களுக்கு மலேரியா, டெங்கு உள்ளிட்ட பல்வேறு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளதால், சுகாதாரமான குடிநீர் கிடைக்க உறுதி செய்யும் வகையில் உடைந்த குடிநீர் குழாயை குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

The post புன்னம்சத்திரம் அருகே காவிரி கூட்டுக் குடிநீர் குழாய் சேதம்: சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: