மலைகள் முழுவதும் பூத்துக்குலுங்கும் குறிஞ்சி மலர்கள்

*12 ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் அதிசய பூ

ஊட்டி : ஊட்டி அருகேயுள்ள கெங்கமுடி அருகே பிக்கப்பதிமந்து பகுதியில் மலைச்சரிவில் பல இடங்களில் குறிஞ்சி மலர்கள் பூத்துள்ளன.சங்க இலக்கியங்களில் இடம் பெற்ற குறிஞ்சி மலர், மலைகளில் பூக்கக்கூடியவை. இந்த வகையான மலர்கள் ஒரு மாதம், 3 மாதம், 6 மாதம், ஆண்டிற்கு ஒரு முறை, 3 ஆண்டுக்கு ஒரு முறை, 6, 8 ஆண்டுக்கு ஒரு முறை மற்றும் 12 ஆண்டுக்கு ஒரு முறை என பூக்கும் தன்மை கொண்டவை.

மேற்கு தொடர்ச்சி மலைகளில், குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை, `ஸ்டபிலான்தஸ் குந்தியானஸ்’ என்ற வகை குறிஞ்சி முதல், ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் `ஸ்டபிலான்தஸ் மினியேச்சர்’ வரை உள்ளன. 20க்கும் மேற்பட்ட வகையான குறிஞ்சி மலர்கள் பூக்கின்றன. எனினும், அவ்வப்போது பூக்கும் குறிஞ்சி மலர்களையும் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் கண்டு ரசித்து செல்வது வழக்கம்.

தற்போது, நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி அருகேயுள்ள கெங்கமுடி அருகே பிக்கப்பதிமந்து பகுதியில் மலைச்சரிவில் பல இடங்களில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் ஸ்டோபிலாந்தஸ் மலர்கள் அதிகளவு பூத்துள்ளன. இவற்றை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பார்வையிட்டு மகிழ்கின்றனர். இதுதவிர அப்பகுதியில் குறிஞ்சி பூத்திருப்பதை அறிந்து ஊட்டி சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்தவர்களும் குறிஞ்சி மலர்களை கண்டு ரசித்து செல்வது மட்டுமின்றி, அதன் அருகே நின்று புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.

The post மலைகள் முழுவதும் பூத்துக்குலுங்கும் குறிஞ்சி மலர்கள் appeared first on Dinakaran.

Related Stories: