இந்திரா காந்திக்கு நேர்ந்தது உங்களுக்கும் நேரும் : ராகுல் காந்திக்கு பாஜக கொலை மிரட்டல் விடுப்பதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை : காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு பா.ஜ.க. தலைவர்கள் மிரட்டல் விடுப்பதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் சிவசேனா (ஷிண்டே) எம்.எல்.ஏ சஞ்சய் கெய்க்வாட், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பவருக்கு ரூ.11 லட்சம் சன்மானம் கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இட ஒதுக்கீடு தொடர்பாக ராகுல் காந்தி அமெரிக்காவில் பேசிய பேச்சுக்கு அவரது நாக்கை அறுக்க வேண்டும் என்று புல்தானா சிவசேனா எம்.எல்.ஏ சஞ்சய் கெய்க்வாட் தெரிவித்துள்ளார். அதே போல் இந்திரா காந்தி போலவே ராகுல் கொல்லப்படுவார் என்று பா.ஜ.க.வினர் மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “இந்திரா காந்திக்கு நேர்ந்தது உங்களுக்கும் நேரும்” என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு, பாஜக தலைவர் மிரட்டியது கண்டிக்கத்தக்கது. அதே போல் ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பவருக்கு பரிசு அறிவித்த ஷிண்டே சிவசேனா கட்சியின் எம்.எல்.ஏ. மிரட்டல் விடுத்தது அதிர்ச்சி அளிக்கிறது. எனது சகோதரர் ராகுலுக்கு மக்களின் ஆதரவு அதிகரிப்பது, சிலரை நிலைகுலைய வைத்துள்ளது. மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியின் பாதுகாப்பை உறுதிசெய்ய ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜனநாயக நாட்டில் மிரட்டல், வன்முறைக்கு இடமில்லை என்பதை மீண்டும் உறுதிசெய்ய வேண்டும்,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post இந்திரா காந்திக்கு நேர்ந்தது உங்களுக்கும் நேரும் : ராகுல் காந்திக்கு பாஜக கொலை மிரட்டல் விடுப்பதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: