மதுபோதையில் கால்பந்து பயிற்சி மேற்கொள்ள வந்தவர்களை தாக்கிய விவகாரம்: பாடகர் மனோவின் 2 மகன்களை நெருங்கியது போலீஸ்

சென்னை: மதுபோதையில் 16வயது சிறுவனை தாக்கிய விவகாரம் – சினிமா பின்னணி பாடகர் மனோவின் 2 மகன்களை கைது செய்ய காவல்துறை தீவிரம் காட்டி வருகின்றனர். செல்போன் சிக்னலை வைத்து தலைமறைவாக உள்ள பின்னணி பாடகர் மனோவின் மகன்களை பிடிக்க நெருக்கியதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

சினிமா பின்னணி பாடகர் வசித்து வரும் வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் பகுதியில் கால்பந்து பயிற்சி மையம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த பயிற்சி மையத்தில் கிருபாகரன்(20) மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோர் பயிற்சி செய்து வருகின்றனர். நேற்றுமுன்தினம் இரவு வளசரவாக்கம், ஸ்ரீதேவி குப்பம் பிரதான சாலை பகுதியில் உள்ள மனோவின் வீட்டின் முன்பு அவரது மகன்கள் போதையில் நண்பர்களுடன் நின்று பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த பகுதியில் கால்பந்து பயிற்சிக்கு வந்த வாலிபர்கள் சிலர் பாடகர் மனோவின் வீட்டின் எதிரே உள்ள ஓட்டலில் சாப்பிட்டு விட்டு மனோவின் வீட்டை வேடிக்கை பார்த்தபடி நடந்து சென்றதாகவும் கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த பாடகர் மனோவின் மகன்கள் ரபீக் மற்றும் ஜாகீர், அவரது நண்பர்களுடன் சேர்ந்து தங்களது வீட்டை எதற்கு நோட்டமிட்டவாறு செல்கிறீர்கள் என்று கேட்டு 16 வயது சிறுவன் மற்றும் கிருபாகரன் ஆகியோரை தாக்கி உள்ளனர். இதனை கண்டதும் அவர்களுடன் வந்த நண்பர்கள் தப்பி ஓடிய நிலையில் சிறுவன் உட்பட இருவரை முட்டி போட வைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இதையடுத்து அங்கிருந்து சென்று அவர்களது நண்பர்கள் ரோந்து பணியில் இருந்த வளசரவாக்கம் போலீசாரை அழைத்து வந்தனர். இதையடுத்து காயம் அடைந்த இருவரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

இது குறித்து வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நேற்று புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து, வளசரவாக்கம் போலீசார் ரபிக், ஜாகீர் உட்பட 5 பேர் மீது ஆபாசமாக பேசுதல், தாக்குதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்துள்ளனர். இதில் விக்னேஷ்(28), தர்மா(26) ஆகிய 2பேரை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே தலைமறைவாக உள்ள மனோவின் மகன்கள் மற்றும் அவர்களது நண்பர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் போதையில் கால்பந்து பயிற்சி மேற்கொள்ள வந்தவர்கள் மீது நடத்திய விவகாரத்தில் செல்போன் சிக்னலை வைத்து தலைமறைவாக உள்ள பின்னணி பாடகர் மனோவின் மகன்களை பிடிக்க நெருக்கியதாக போலீசார் தகவல் தெரிவிட்டுத்ள்ளனர். மனோவின் மகன்கள் இருவரையும் பிடிக்க வளசரவாக்கம் காவல் உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையில் 5 பேர் கொண்ட தனிப்படை போலீஸ் ஈசிஆர் விரைந்துள்ளது. செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதால் சிடிஆர் மூலம் கண்காணித்து தலைமறைவாக உள்ள இருவரையும் கைது செய்ய தனிப்படை தீவிரம் காட்டி வருகிறது.

The post மதுபோதையில் கால்பந்து பயிற்சி மேற்கொள்ள வந்தவர்களை தாக்கிய விவகாரம்: பாடகர் மனோவின் 2 மகன்களை நெருங்கியது போலீஸ் appeared first on Dinakaran.

Related Stories: