திருக்குவளை வட்டத்தில் ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ சிறப்பு முகாம்

*கலெக்டர் களஆய்வு மேற்கொண்டார்

கீழ்வேளூர் : நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை வட்டத்தில் “உங்களை தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் ஆகாஷ் கள ஆய்வு மேற்கொண்டார்.மக்களை நாடி, மக்கள் குறைகளை கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் “உங்களை தேடி, உங்கள் ஊரில்” திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும், இனி ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் வட்டம் அளவில் தங்கி, முதல் நாள் காலை 9.00 மணி முதல் மறுநாள் காலை 9.00 வரையில் கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும், தங்கு தடையின்றி மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்ய வேண்டும் என அதன்படி, “உங்களை தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை வட்டத்தில் மாவட்ட கலெக்டர் ஆகாஷ் அரசு அலுவலகங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து கள ஆய்வு மேறகொண்டார்.

அதன் அடிப்படையில் திருக்குவளை வட்டாட்சியர் அலுவலத்தில் மாவட்ட கலெக்டர் பராமரிக்கப்படும் பதிவேடுகள், அலுவலக கோப்புகள், பதிவு அறை, வைப்பறை மற்றும் அலுவலக பணிகள் குறித்தும் அலுவலர்களிடம் கேட்டறிந்தார். திருக்குவளை அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்க்கொண்ட மாவட்ட மாவட்ட கலெக்டர் ஆகாஷ் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். திருக்குவளை தமிழ்நாடு நுகர்வுபொருள் வாணிபக்கழக வட்ட செயல்முறை நெல் சேமிப்பு கிடங்கில் மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டு, சேமித்து வைக்கப்பட்டுள்ள நெல்களின் இருப்பு, நெல்களின் தரம் மற்றும் நெல்களின் இருப்பு குறித்து பராமரிக்கப்பட்டுவரும் குறிப்பேடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

அருந்தவம்புலம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்களின் வருகை, பள்ளியின் அடிப்படை வசதிகள் குறித்தும், மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பண்ணைதெரு ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் உள்ள சேவை மையத்திலும், பண்ணைதெரு கிராமத்தில் உள்ள நியாயவிலை கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருட்களின் தரம் மற்றும் இருப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார். மாராச்சேரி கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையம் மற்றும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும், ஆதமங்கலம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியிலும், மாணவர்களின் வருகை, பள்ளியின் அடிப்படை வசதிகள் குறித்தும், மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

ஆதமங்கலம் கிராமத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டும் பணிகளையும், ஆதமங்கலம் கிராம நிர்வாக அலுவலகத்திலும், திருக்குவளை நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உதவி பொறியாளர் அலுவலகத்திலும், திருக்குவளை சார் பதிவாளர் அலுவலகத்திலும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அதனைதொடர்ந்து திருக்குவளை வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.

பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளவும், அரசின் திட்டங்கள் பொதுமக்கள் அனைவரும் பயன்பெறும் வண்ணம் செயல்பட வேண்டும் என துறை சார்ந்த அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் 38 துறை சார்ந்த அலுவலர்களுக்கு திருக்குவளை வட்டத்தில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வருவாய் கிராமங்கள், ஊராட்சிகளில் ஆய்வு செய்யப்பட்ட அறிக்கைகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் தொடர்பாக கலெக்டரிடம் அறிக்கை சமர்பிக்கப்பட்டு ஆய்வு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இக்களஆய்வில் மாவட்ட வருவாய் அலுவலர் பேபி, முதுநிலை மண்டல மேலாளர் சிவப்பிரியா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரூபன் சங்கர் ராஜ், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கார்த்திகேயன், வேதாரண்யம் வருவாய் கோட்டாட்சியர் திருமால், திருக்குவளை வட்டாட்சியர் சுதர்சன், வட்டார வளர்ச்சி அலுவலர் ரேவதி, வேளாண்மை துறை அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post திருக்குவளை வட்டத்தில் ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ சிறப்பு முகாம் appeared first on Dinakaran.

Related Stories: