2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்குட்பட்ட வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் செப். 19ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. இந்நிலையில் இந்த தொடருக்கான அட்டவணையில் சில மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அட்டவணையின் படி வங்கதேசத்திற்கு எதிரான முதல் டி20 போட்டி தர்மசாலாமைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் தற்போது அந்த மைதானம் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இதனால் மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் மந் மாதவராவ் சிண்டியா மைதானத்திற்கு முதல் டி.20போட்டி மாற்றப்பட்டுள்ளது. இந்த மைதானத்தில் கடைசியாக கடந்த 2010ம் ஆண்டு இந்தியா-தென்ஆப்ரிக்கா அணிகள் மோதிய ஒருநாள் போட்டி நடைபெற்றது. அதில் சச்சின் டெண்டுல்கர் இரட்டை சதம் அடித்தார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் முறையாக இரட்டை சதமடித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். அதன் பின் அந்த மைதானம் இடிக்கப்பட்டு புதிதாக கட்டமைக்கப்பட்டது. தற்போது அனைத்து பணிகளும் முடிந்ததால் 14 வருடம் கழித்து மீண்டும் இந்தியா அங்கு விளையாட உள்ளது. இதேபோல் ஜனவரியில் இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி.20 தொடரின் முதல் போட்டி சென்னையிலும், 2வதுபோட்டி கொல்கத்தாவிலும் நடைபெற இருந்தது. ஆனால் குடியரசு தினத்துக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியுள்ளதால் அந்த தேதியை மாற்றுமாறு கொல்கத்தா காவல்துறை கேட்டுக்கொண்டது. இதையடுத்து. ஜன. 22ம் தேதி முதல் போட்டி கொல்கத்தாவுக்கும், 2வது போட்டி ஜன. 25ம் தேதி சென்னைக்கும் மாற்றப்பட்டுள்ளது.
The post டெண்டுல்கர் இரட்டை சதம் அடித்த குவாலியர் கிரிக்கெட் மைதானத்தில் 14 ஆண்டுக்கு பின் சர்வதேச போட்டி: வங்கதேசத்துடன் டி.20 போட்டியில் இந்தியா மோதுகிறது appeared first on Dinakaran.