தொழிலாளியை தாக்கியவர் கைது

பரமத்திவேலூர், ஆக.13: குமாரபாளையம் தட்டான்குட்டை அருகே உள்ள சடையம்பாளையம் காந்திநகரை சேர்ந்தவர் சீனிவாசன்(44). இவர் ஜேடர்பாளையத்தில் வசிக்கும் தனது தாயை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர், கபிலர்மலையில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று அளவுக்கு அதிகமாக மது அருந்தி விட்டு, அருகே உள்ள சில்லி சிக்கன் கடைக்கு சென்றுள்ளார். அங்கு சில்லி சிக்கன் வாங்கி சாப்பிட்டபோது, அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த பரமத்திவேலூர், பள்ளிவாசல் பகுதியை சேர்ந்த அஷ்ரப் அலி(38) என்பவருக்கும், சீனிவாசனுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த சீனிவாசன், அஷ்ரப் அலியை கடையில் கிடந்த கட்டையை எடுத்து தலையில் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த அஷ்ரப் அலியை கடையில் இருந்த சக தொழிலாளர்கள் மீட்டு, ஜேடர்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து அஷ்ரப் அலியை தாக்கிய சீனிவாசனை கைது செய்து, பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பரமத்தியில் உள்ள கிளை சிறையில் அடைத்தனர்.

The post தொழிலாளியை தாக்கியவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: