புதுவை சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது!

புதுச்சோி: புதுச்சேரி சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் கவர்னர் உரையுடன் நாளை (31ம்தேதி) தொடங்குகிறது. 2ம்தேதி முதல்வர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்கிறார். புதுச்சேரி 15வது சட்டசபையின் 5வது கூட்டம் நாளை காலை 9.30 மணிக்கு (31ம்தேதி) கவர்னர் உரையுடன் தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 2ம்தேதி (வெள்ளிக்கிழமை) 2024- 2025 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. நிதித்துறை ெபாறுப்பை வகிக்கும் முதல்வர் ரங்கசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்குபின் தேஜ கூட்டணி அரசு தாக்கல் செய்யும் பட்ஜெட் என்பதால், பல்வேறு சலுகைகள் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் எழுந்துள்ளது.

இதனிடையே தேஜ கூட்டணிக்குள் உரசல் நீடித்து வரும் நிலையில், சட்டசபை கூட்டம் தொடங்கும் முதல்நாளில் இருந்து பல்வேறு பிரச்னைகளை எழுப்ப திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சட்டசபை கூட்டத் தொடர் எத்தனை நாட்கள் நடத்தப்படும் என்பதை சபை ெதாடங்கியதும் சபையின் அலுவல் குழு கூடி முடிவெடுத்து அறிவிக்க உள்ளது. அதாவது தொடர்ந்து 2 வாரங்கள் சட்டசபையை நடத்த திட்டமுள்ளதாக தெரிகிறது. இதனிடையே கவர்னர் உரையை முடித்துவிட்டு புதுவையிலிருந்து சி.பி ராதாகிருஷ்ணன் விடைபெறும் நிலையில், புதிய கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள கே.கைலாசநாதன் வருகிற 2ம்தேதி மாலை முறைப்படி பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

The post புதுவை சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது! appeared first on Dinakaran.

Related Stories: