இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 15.5 லட்சம் புதிய புற்றுநோயாளிகள்பதிவாகின்றனர்: ஒன்றிய அமைச்சர் ஜே.பி.நட்டா தகவல்

புதுடெல்லி: இந்தியாவில் புற்றுநோய் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், எளிதில் சிகிச்சைகள் கிடைக்கும் வகையிலான அனைத்து முயற்சிகளை அரசு எடுத்து வருவதாக ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்தார். நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி நேரத்தின்போது துணைக் கேள்விகளுக்கு பதில் அளித்த ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, ‘நாட்டில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் இந்த எண்ணிக்கை 2.5 சதவீதம் அதிகரித்து வருகிறது. ஆண்களில் வாய் மற்றும் நுரையீரல் புற்றுநோயாளிகள் அதிகரித்து வருகிறது. பெரும்பாலும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் அதிகரித்து வருகின்றது. ஒவ்வொரு ஆண்டும் 15.5 லட்சத்துக்கும் அதிகமான புதிய புற்றுநோயாளிகள் பதிவாகின்றனர். புற்றுநோய்க்கு பயன்படுத்தும் 131 மருந்துகளின் பட்டியல் உள்ளன. அவற்றுக்கான விலைகள் அரசாங்கத்தால் தீர்மானிக்கப்படுகின்றன.

இந்த விலைக் கட்டுப்பாட்டால், நோயாளிகள் மொத்தமாக ரூ.294 கோடி வரை மிச்சப்படுத்தியுள்ளனர். கடந்த 2014ம் ஆண்டு 387 ஆக இருந்த மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை தற்போது 731 ஆக உயர்ந்துள்ளது. இதே காலக்கட்டத்தில் 51,348 ஆக இருந்த மருத்துவ படிப்புக்கான (எம்பிபிஎஸ்) இடங்கள் 1,12,112 (1.12 லட்சம்) உயர்ந்துள்ளது. மருத்துவ மாணவர்களுக்கான முதுகலை படிப்புக்கான இடங்களின் எண்ணிக்கை 2014ல் 31,185 ஆக இருந்தது. தற்போது அவை 72,627 ஆக உயர்ந்துள்ளன’ எனத் தெரிவித்தார்.

The post இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 15.5 லட்சம் புதிய புற்றுநோயாளிகள்பதிவாகின்றனர்: ஒன்றிய அமைச்சர் ஜே.பி.நட்டா தகவல் appeared first on Dinakaran.

Related Stories: