தமிழகம் முழுவதும் கோயில்களில் சிறப்பு வழிபாடு; களைகட்டிய விநாயகர் சதுர்த்தி விழா.! சிலை வைக்கப்பட்ட இடங்களில் போலீஸ் பாதுகாப்பு

சென்னை: சென்னை உட்பட தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக திருச்சி மலைக்கோட்டை, பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர், கோவை புளியங்குளம் பெரிய முந்தி விநாயகர், கும்பகோணம் திருவலஞ்சுழி சுவேத விநாயகர், சென்னை பெசன்ட் நகரில் உள்ள வரசித்தி விநாயகர் கோயில் உட்பட அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன. அதுமட்டுமின்றி, புரசைவாக்கம், பாரிமுனை, தியாகராய நகர், பெரம்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விதவிதமான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் வீடுகளில் வைத்து பூஜை செய்வதற்காக ரூ.50 முதல் ரூ.500 வரையிலான சிறிய விநாயகர் சிலைகளையும், களிமண் விநாயகர் சிலைகளும் மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். அத்துடன் விநாயகருக்கு மேல் வைப்பதற்கான சிறியஅளவிலான குடைகளையும் குழந்தைகள் விரும்பி வாங்கிச் செல்கின்றனர். மேலும் பொது இடங்களிலும் பெரிய பந்தல்கள் அமைக்கப்பட்டு ஆங்காங்கே விநாயகர்சிலைகள் அமைக்கப்படுகின்றன. உயர் நீதிமன்ற வழிகாட்டு முறைகள் படி பல்வேறு நிபந்தனைகளுடன் இந்த ஆண்டு மாநிலம் முழுவதும் மொத்தம் 80 ஆயிரம் விநாயகர் சிலைகள் அமைத்து பிரதிஷ்டை செய்ய காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.

சென்னையை பொருத்தவரை பெருநகர காவல்துறை கமிஷனர் அருண் கடந்த ஆண்டு அனுமதிக்கப்பட்ட 1,519 இடங்களில் இந்த ஆண்டும் விநாயகர் சிலைகள் வைத்து பிரதிஷ்டை செய்ய அனுமதி வழங்கியுள்ளார். அதேபோல், ஆவடி மாநகர காவல் சரகத்தில் 503 சிலைகளும், தாம்பரம் மாநகர காவல் சரகத்தில் 699 சிலைகளும் சென்னை பெருநகர காவல் சரகத்தில் 1,519 சிலைகள் என மொத்தம் 2,721 சிலைகள் வைத்து வழிபாடு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

சென்னை பெருநகர காவல் எல்லையில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும் 1,519 இடங்களில் எவ்வித அசம்பாவிதமும் நிகழாமல் வழிபாடுகள் மேற்கொள்ள 10 ஆயிரம் போலீசார் மற்றும் 2 ஆயிரம் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல், ஆவடி மாநகர காவல் எல்லையில் 3,500 போலீசார் மற்றும் 300 ஊர்க்காவல் படையினரும், தாம்பரம் மாநகர காவல் எல்லையில் 3,300 காவலர்கள் மற்றும் 350 ஊர்க்காவல் படையினர் என மொத்தம் 16,800 போலீசார் மற்றும் 2,650 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சிலைகள் கரைப்பது தொடர்பாக போலீசார், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஏற்கெனவே பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர். அதன்படி, இந்த விநாயகர் சிலைகள் 3வது நாள் அல்லது 5வது நாளில் அருகில் உள்ள நீர்நிலைகளில் கரைக்கப்படுகிறது.

The post தமிழகம் முழுவதும் கோயில்களில் சிறப்பு வழிபாடு; களைகட்டிய விநாயகர் சதுர்த்தி விழா.! சிலை வைக்கப்பட்ட இடங்களில் போலீஸ் பாதுகாப்பு appeared first on Dinakaran.

Related Stories: