கடந்த 10 நாட்களாக நடைபெற்று வரும் பாரீஸ் பாராலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவு

 

பாரிஸ்: கடந்த 10 நாட்களாக நடைபெற்று வரும் பாரீஸ் பாராலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவு பெறுகிறது. பாரீசில் உள்ள ஸ்டேட் டி பிரான்ஸ் ஸ்டேடியத்தில் இன்றிரவு 11.30 மணிக்கு நிறைவு விழா தொடங்கும்.

பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில் மாற்று திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் விளையாட்டு போட்டி ஆகஸ்ட் 28ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. வரும் செப்டம்பர் 8-ம் தேதி வரை நடைபெறும் இந்த திருவிழாவில் 22 விளையாட்டுகளில் 549 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. 169 நாடுகளைச் சேர்ந்த 4,400 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு பதக்கம் வெல்ல போராட உள்ளனர். இந்த விளையாட்டு திருவிழாவில் இந்தியாவில் இருந்து 84 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

இவர்கள் 12 வகையிலான விளையாட்டுகளில் பங்கேற்கின்றனர். இந்திய அணியானது அனுபவம் மற்றும் இளம் வீரர்களை உள்ளடக்கிய கலவையாக உள்ளது. பாராலிம்பிக்ஸில் இந்தியாவில் இருந்து அதிகமானோர் பங்கேற்பது இதுவே முதன்முறையாகும். இதற்கு முன்னர் டோக்கியோ பாரலிம்பிக்கிஸில் 54 பேர் பங்கேற்றிருந்தனர். பாரிஸ் பாராலிம்பிக்ஸ் போட்டியில் இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் இடம் பெற்றுள்ளனர்.

இவர்களில் மாரியப்பன் தங்கவேலு ஆடவருக்கான உயரம் தாண்டுதலில் பங்கேற்கிறார். பாட்மிண்டனில் சோலைமலை சிவராஜ் ஆடவர் ஒற்றையர் பிரிவு, கலப்பு இரட்டையர் பிரிவில் கலந்து கொள்கிறார். நித்யா ஸ்ரீ சுமதி சிவன் மகளிர் ஒற்றையர் பிரிவு, கலப்பு இரட்டையர் பிரிவில் விளையாடுகிறார். துளசிமதி முருகேசன் மகளிர் ஒற்றையர் பிரிவு, கலப்பு இரட்டையர் பிரிவில் கலந்து கொள்கிறார். மனிஷா ராமதாஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் பங்கேற்கிறார்.

பதக்கப் பட்டியலில் 7 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 29 பதக்கங்களுடன் இந்தியா 16-வது இடத்தில் உள்ளது. 94 தங்கம், 73 வெள்ளி, 49 வெண்கலம் என மொத்தம் 216 பதக்கங்களுடன் பட்டியலில் சீனா முதலிடத்தில் உள்ளது. கடைசி நாளான இன்று தடகளம், கனோயிங், வீல்சேர் கூடைப்பந்து போட்டிகளில் மொத்தம் 14 தங்கப்பதக்கம் வழங்கப்படுகிறது. பாரீஸ் பாராலிம்பிக் நிறைவு விழாவில் கண்கவர் கலை நிகழ்ச்சிகள், நடனம், வாணவேடிக்கை இடம்பெற உள்ளன.

The post கடந்த 10 நாட்களாக நடைபெற்று வரும் பாரீஸ் பாராலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவு appeared first on Dinakaran.

Related Stories: