பாரீஸ் ஒலிம்பிக் 10 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இந்தியாவுக்கு ஏமாற்றம் : முதல் தங்கத்தை தட்டிச் சென்றது சீனா!!

பாரிஸ்:பாரீஸ் ஒலிம்பிக் 10 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இந்திய கலப்பு இரட்டையர் அணிகள் ஏமாற்றத்துடன் வெளியேறின. 33வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் நேற்றிரவு கோலாகலமாக தொடங்கியது. வரும் ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெறும் இந்த விளையாட்டு திருவிழாவில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,741 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். முதல் நாளான இன்று 14 தங்க பதக்கங்களுக்கான போட்டிகள் நடக்கிறது.

இந்த நிலையில் 10 மீட்டர் ஏர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் தகுதிச் சுற்று போட்டிகள் நடந்தன. இந்த போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன்-சந்தீப் சிங் இணை மற்றும் ரமீதா – பபுதா அர்ஜூன் ஆகிய இரண்டு அணிகள் பங்கேற்றன. தகுதி சுற்றுப் போட்டியில் ஒவ்வொரு துப்பாக்கி சுடும் வீரரும் 30 முறை சுட வாய்ப்பளிக்கப்படும். தகுதிச் சுற்றில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் பதக்கம் வெல்லும் சுற்றுக்கு முன்னேறும்.

ஆனால் தகுதி சுற்றில் ரமிதா – பபுதா அர்ஜூன் ஜோடி 628.7 புள்ளிகளுடன் 6ம் இடத்தைப் பிடித்து வெளியேறியது. அதே போல் இளவேனில் வாலறிவன் – சந்தீப் சிங் ஜோடி 626.3 புள்ளிகளைப் பெற்று 12வது இடம் பிடித்து வெளியேறின. சீனா (632.2), தென் கொரியா (631.4), கஜகஸ்தான் (630.8), ஜெர்மனி (629.7) ஆகிய 4 நாடுகள் 10 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் பதக்கம் வெல்லும் போட்டிக்கு முன்னேறின. இதில் ஜெர்மனியை தோற்கடித்து கஜகஸ்தான் வெண்கலத்தை வென்றது. அதே போல், சீனா தங்கத்தையும் தென் கொரியா வெள்ளியையும் வென்றது.

The post பாரீஸ் ஒலிம்பிக் 10 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இந்தியாவுக்கு ஏமாற்றம் : முதல் தங்கத்தை தட்டிச் சென்றது சீனா!! appeared first on Dinakaran.

Related Stories: