2வது சீசனுக்காக தாவரவியல் பூங்காவில் நாற்று நடவு பணிகள் துவங்கின

ஊட்டி : ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 2வது சீசனுக்கான நாற்று நடவு பணிகளை நீலகிரி மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்தார்.நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஏப்ரல் மற்றும் மே மாதம் முதல் சீசன் ஆக கடைபிடிக்கப்படுகிறது. முதல் சீசனின் போது வெளிமாநிலம் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இவர்களை மகிழ்விக்கும் பொருட்டு ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்த மலர் கண்காட்சியின் போது 5 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு அதில் மலர்கள் பூத்துக்குலுங்கும்.

இதேபோல், 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலர் தொட்டிகள் தயார் செய்யப்பட்டு அதில் பல்வேறு வண்ணங்களில் மலர்கள் பூத்துக்குலுங்கும். இந்த மலர் தொட்டிகளை அங்குள்ள மாடங்களில் அலங்காரம் செய்து வைக்கப்படும். இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். 2வது சீசனான செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் மலர்க்கண்காட்சி நடத்தாத போதிலும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு மலர் அலங்காரங்கள் மேற்கொள்ளப்படும். இதற்காக, ஆண்டுதோறும் 5 லட்சம் மலர் செடிகள் பூங்கா முழுவதும் நடவு செய்யப்படும்.

இதேபோல், 15 ஆயிரம் மலர் தொட்டிகள் தயார் செய்யப்பட்டு மாடங்களில் அடுக்கி வைக்கப்படும். இந்நிலையில், 2வது சீசன் நெருங்கிய நிலையில் நேற்று இதற்கான நாற்று நடவு பணிகள் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நடந்தது. நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தன்னீரு நடவு பணிகளை துவக்கி வைத்தார். தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் சிபிலா மேரி முன்னிலை வைத்தார். தொடர்ந்து நீலகிரி மாவட்ட கலெக்டர் கூறியதாவது:

2வது சீசனை முன்னிட்டு ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நாற்று நடவு பணிகள் துவக்கி வைக்கப்பட்டது. இதற்காக கொல்கத்தா, காஷ்மீர், பஞ்சாப், புனே போன்ற இடங்களில் இருந்து இன்கா மேரி கோல்டு, காஸ்மஸ், பேன்சி, பெட்டூனியா, ஜினியா, ஸ்வீட் லில்லியம், அஜிரேட்டம், காலண்டூலா, ஹெலிக்கிரேசம், சப்னேரியா போன்ற 60 வகைகளில் பல்வேறு வகையான விதைகள் கொண்டு வரப்பட்டு சுமார் ஐந்து லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்படவுள்ளது.

மேலும், தொட்டிகளில் 15,000 மலர் செடிகள் நடவு செய்யப்பட உள்ளன. சால்வியா, டெய்சி, டெல்பினியம், டேலியா போன்ற முப்பது வகையான நமது செடிகள் தொட்டிகளில் நடவு செய்யப்பட உள்ளன. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

The post 2வது சீசனுக்காக தாவரவியல் பூங்காவில் நாற்று நடவு பணிகள் துவங்கின appeared first on Dinakaran.

Related Stories: