வீட்டில் தனியாக தூங்கியபோது கத்தி முனையில் மிரட்டி மாணவி பலாத்காரம்: கேரள வாலிபர் கைது

சென்னை: விருகம்பாக்கத்தை சேர்ந்தவர் விமலா (22, பெயர் மாற்றப்பட்டுள்ளது). வாடகை வீட்டில் வசித்து வரும் இவர், தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். இவர், வசித்து வரும் வீட்டின் அருகே உள்ள குடியிருப்பு ஒன்றில் பணியாற்றி வரும் கேரள மாநிலத்தை சேர்ந்த நந்து லால் (23) என்பவர், அடிக்கடி விமலாவை பின்தொடர்ந்து வந்துள்ளார். இதை அவர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இதற்கிடையே விமலா வீட்டில் தனியாக வசித்து வருவதை கவனித்த நந்துலால், கடந்த வாரம் அதிகாலை 4.30 மணிக்கு யாருக்கும் தெரியாமல் சுவர் ஏறி குதித்து விமலா வீட்டின் கதவை தட்டியுள்ளார். இதையடுத்து, விமலா எழுந்து யார் என்று கேட்டப்படி கதவை திறந்துள்ளார். அப்போது நந்துலால், விமலா வாயை பொத்தி, வீட்டிற்குள் தூக்கி சென்று, கத்தி முனையில் மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார்.

பிறகு விமலாவிடம், இதை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். இதை சற்றும் எதிர்பார்க்காத விமலா, தனக்கு நேர்ந்த கொடுமையை நண்பர்கள் உதவியுடன் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாராக அளித்தார். போலீசார் புதிய குற்றவியல் சட்டத்தின்படி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த நந்துலால் மீது வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இதற்கிடையே நந்துலால் செல்போன் சிக்னல்களை வைத்து ஆய்வு செய்த போது, அவர் சொந்த ஊரில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. தனிப்படை போலீசார் கேரளா விரைந்து சென்று, நந்துலாலை கைது செய்து, சென்னைக்கு அழைத்து வந்து நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post வீட்டில் தனியாக தூங்கியபோது கத்தி முனையில் மிரட்டி மாணவி பலாத்காரம்: கேரள வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: