பீகார் சட்டப்பேரவையில் பரபரப்பு நீ ஒரு பெண்… உனக்கு ஒன்றும் தெரியாது: பெண் எம்எல்ஏவை நோக்கி முதல்வர் நிதிஷ்குமார் ஆவேசம்

பாட்னா: பீகார் சட்டப்பேரவையில் முதல்வர் நிதிஷ்குமார் பேசும் போது, பீகாரின் சிறப்பு அந்தஸ்து மற்றும் இட ஒதுக்கீட்டில் நிதிஷ்குமார் அரசின் தோல்வி குறித்து, ராஷ்ட்ரீய ஜனதாதளம் மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் முதல்வருக்கு எதிரான முழுக்கங்களை எழுப்பின. அப்போது முதல்வர் நிதிஷ்குமாரை நோக்கி ராஷ்ட்ரீய ஜனதாதள பெண் எம்எல்ஏ ரேகா தேவி சரமாரியாக கேள்வி கேட்டார்.

இதனால் மிகவும் உணர்ச்சி வசப்பட்ட முதல்வர் நிதிஷ்குமார் மிகவும் ஆக்ரோஷமாக, பெண் எம்எல்ஏ ரேகா தேவியை நோக்கி, ‘நீங்கள் ஒரு பெண்.உங்களுக்கு ஒன்றும் தெரியாது’ என்று கூறினார். இதனால் கடும் அமளி ஏற்பட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டது. முதல்வர் நிதிஷ்குமாரின் இந்த சர்ச்சை பேச்சு குறித்து எம்எல்ஏ ரேகா தேவி கூறும்போது, ‘என்னை மட்டுமல்ல, ஒவ்வொரு தலித் பெண்ணையும் அவர் இதன் மூலம் அவமதித்துள்ளார். முதல்வரின் பேச்சு என்னை மிகவும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

வயதாகி விட்டதால் அவர் வாய்க்கு வந்தபடி பேசுகிறார். கடந்த கூட்டத் தொடரிலும் அவர் இதேபோன்று ஒரு பெண் எம்எல்ஏவிடம் மரியாதைக் குறைவாக ஏதோ ஒன்றைக் கூறி, அந்தப் பெண் எம்எல்ஏவை அழ வைத்தார். முதல்வரின் இந்தப் பேச்சால் நான் மிகவும் மனம் புண்பட்டுள்ளேன். அவர் தனது இந்தப் பேச்சுக்காக அனைத்துப் பெண்களிடமும் மன்னிப்புக் கோர வேண்டும்’என்று கூறியிருக்கிறார்.

The post பீகார் சட்டப்பேரவையில் பரபரப்பு நீ ஒரு பெண்… உனக்கு ஒன்றும் தெரியாது: பெண் எம்எல்ஏவை நோக்கி முதல்வர் நிதிஷ்குமார் ஆவேசம் appeared first on Dinakaran.

Related Stories: