இலங்கை கடற்படை அட்டூழியம் தொடர்கிறது ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் சிறைபிடிப்பு: 2 விசைப்படகுகள் பறிமுதல்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர், 2 விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்ற சம்பவம், மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பாக் ஜலசந்தி கடலில் காற்றின் வேகம் குறைந்ததால் ராமேஸ்வரம் மீனவர்கள் 6 நாட்களுக்கு பிறகு, நேற்று முன்தினம் 450க்கும் அதிகமான விசைப்படகுகளில் கடலுக்கு சென்று மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களை விரட்டியடித்தனர். மேலும் அப்பகுதியில் மீன் பிடிக்க விடாமல், 10க்கும் மேற்பட்ட ரோந்து படகுகள் மூலம் மீனவர்கள் சென்ற படகுகளில் மோதி மூழ்கடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதில் ஆரோக்கியதாஸ் என்பவரின் படகின் பின்பகுதி உடைந்து நொறுங்கியது.

தொடர்ந்து, ராமேஸ்வரம் தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த ஈசாக் ராபின் என்பவரின் படகில் சென்ற மீனவர்கள் சகாய ராபர்ட் (49), யாக்கோபு (24), முத்துராமலிங்கம் (51), ராதா (44), சேகர் (40) மற்றும் செல்வக்குமார் படகில் சென்ற ஹரிகிருஷ்ணன் (50), பொன் ராமராஜ் (26), ராம்குமார் (24), லிபின் சாய் ஆகிய 9 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். கைதான மீனவர்களை காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு சென்றனர். இச்சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மண்டபம் மீனவர்கள் விரட்டியடிப்பு: மண்டபம் கடலோரப் பகுதியில் இருந்து நேற்று முன்தினம் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். அப்போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், அவர்களை விரட்டி அடித்தனர். இதனால் இவர்களும் குறைவான மீன்களுடன் கரை திரும்பினர்.

* 35 நாட்களில் 83 பேர் கைது
கடந்த 35 நாட்களில் நேற்று கைதான மீனவர்கள், படகுகளை சேர்த்து மொத்தம் 83 மீனவர்களையும், 14 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர்.

The post இலங்கை கடற்படை அட்டூழியம் தொடர்கிறது ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் சிறைபிடிப்பு: 2 விசைப்படகுகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: