திருவிதாங்கோடு அருகே மது விருந்தில் பிளம்பரை கழுத்து அறுத்து கொன்றவர்கள் 3 நண்பர்கள்

*திடீரென ஏற்பட்ட தகராறில் விபரீதம்

*விசாரணையில் திடுக் தகவல்

குமாரபுரம் : திருவிதாங்கோடு அருகே நடந்த பிளம்பர் கொலையில் அவருடன் மது விருந்தில் பங்கேற்ற அவரது நண்பர்கள் 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
குமரி மாவட்டம் தக்கலை அடுத்த திருவிதாங்கோடு அண்ணாநகர் காலனியை சேர்ந்தவர் மகேஷ் (37). பிளம்பர். இவருக்கும், உறவுக்கார பெண் ஒருவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. ஆனால் குடும்ப தகராறு காரணமாக, திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே மகேசை, அவரது மனைவி பிரிந்து சென்று விட்டார். அதன் பிறகு மகேஷ், மஸ்கட்டுக்கு வேலைக்கு சென்றார்.

அங்கு ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வந்த போது, அந்த பகுதியில் உள்ள பியூட்டி பார்லர் ஒன்றில் பணியாற்றி வந்த சென்னையை சேர்ந்த சோபி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறி அவரை திருமணம் செய்து கொண்டு சொந்த ஊருக்கு வந்தார். திருவிதாங்கோடு அண்ணாநகர் காலனியில் தனியாக ஒரு வீடு வாடகைக்கு எடுத்து மனைவி சோபியுடன் அங்கு வசித்து வந்தார்.

கடந்த 20ம்தேதி, சோபி சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். இதையடுத்து இரவில், மகேஷ் தனது நண்பர்கள் சிலரை வீட்டுக்கு அழைத்து மது விருந்து அளித்தார். இதில் வீட்டில் மது அருந்தி நண்பர்கள் அனைவரும் உற்சாகமாக இருந்தனர். ஆனால் நேற்று முன் தினம் மதியம் வரை மகேஷ் வீட்டில் இருந்து வெளியே வர வில்லை. இதனால் அந்த பகுதியில் உள்ள அவரது தங்கையின் குழந்தைகள் அவரை தேடி சென்றனர். அப்போது வீட்டின் மொட்டை மாடியில், மகேஷ் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் தக்கலை போலீசார் சம்பவ இடம் சென்று மகேஷ், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். மகேஷ் வீட்டு அருகில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். மேலும் மகேஷ் செல்போன் எண்ணை யார், யார் தொடர்பு கொண்டார்கள். மகேஷ் யார், யாரை தொடர்பு கொண்டார் என்பது குறித்து விசாரணை நடந்தது.

இந்த விசாரணையின் அடிப்படையில் தற்போது இந்த கொலை தொடர்பாக திருவிதாங்கோடு மல்லன்விளையை சேர்ந்த பெனிட் (27), திக்கணங்கோடு பொற்றை காட்டுவிளையை சேர்ந்த திரேன்ஸ் (23), மல்லன்விளையை சேர்ந்த பிபின் ஜேக்கப் (23) ஆகிய 3 பேர் மீது பி.என்.எஸ். சட்டப்பிரிவு 103 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

போலீசார் நடத்திய தொடர் விசாரணையில், பெனிட் தாயாரை மகேஷ் அவதூறாக பேசி உள்ளார். இதை திரேன்ஸ் கண்டித்துள்ளார். அப்போது திரேன்ஸ் மற்றும் பெனிட் ஆகியோரை மகேஷ் தாக்கியதாக கூறப்படுகிறது. எனது வீட்டில் வைத்து மது அருந்தி என்னிடமே தகராறு செய்கிறீர்களா? என கேட்டு அவதூறாக பேசி உள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்து மூவரும் சேர்ந்து, மகேசை சரமாரியாக தாக்கி ஆத்திரத்தில் கத்தியால் கழுத்தை அறுத்து கொன்றதாக கூறப்படுகிறது. மேலும் வீட்டில் உள்ள பொருட்களையும் அடித்து நொறுக்கி உள்ளனர். அவர்களிடம் இருந்து தப்ப மொட்டை மாடிக்கு மகேஷ் ஓடி உள்ளார். அப்போது துரத்தி, துரத்தி தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார் என்பது தெரிய வந்தது. தற்போது தலைமறைவானவர்களை பிடிக்க இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

The post திருவிதாங்கோடு அருகே மது விருந்தில் பிளம்பரை கழுத்து அறுத்து கொன்றவர்கள் 3 நண்பர்கள் appeared first on Dinakaran.

Related Stories: