ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 61 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 4 நாட்களில் 17.48 அடி உயர்வு

மேட்டூர்: கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால், ஒகேனக்கல் காவிரியில் இன்று காலை நீர்வரத்து 61 ஆயிரம் கனஅடியாகவும், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 53,098 கனஅடியாகவும் அதிகரித்துள்ளது. கர்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு, வயநாடு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹாரங்கி அணைகளுக்கு, நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

கபினி அணை தனது முழு கொள்ளளவை எட்டி உள்ளது. மற்ற அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து தற்போது விநாடிக்கு 78 ஆயிரம் கனஅடி தண்ணீர், காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நேற்று காலை 6 மணியளவில் 45 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து அதிகரித்தது. மாலை 3 மணிக்கு 50 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 61 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீர்வரத்து அதிகரிப்பால் மெயினருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் மற்றும் காவிரி ஆற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. மெயினருவிக்கு செல்லும் நடைபாதையை மூழ்கடித்தவாறு தண்ணீர் பாய்ந்து செல்கிறது. இதனால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவும், பரிசல் பயணம் செய்யவும் விதிக்கப்பட்ட தடை, தொடர்ந்து நீடிக்கிறது. நாடார்கொட்டாய், ஊட்டமலை, சத்திரம் மற்றும் நெருப்பூர் உள்ளிட்ட காவிரி கரையோர பகுதியில் வசிக்கும் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் போலீசார், ஊர்க்காவல் படையினர், காவிரி கரையோர பகுதிகளில் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர். காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை, காவிரியின் நுழை விடமான கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில், மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இதேபோல் கடந்த 4 நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று காலை 40,018 கனஅடியாக இருந்த நீர்வரத்து மாலையில் 44,353 கனஅடியாக அதிகரித்தது. இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து 53,098 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் வறண்டு கிடந்த மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கடந்த 16ம் தேதி காலை 43.83 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 61.31 அடியாக உயர்ந்துள்ளது. கடந்த நான்கு நாட்களில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 17.48 அடி உயர்ந்துள்ளது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 25.67 டிஎம்சியாக உள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் இன்று 5வது நாளாக அடிபாலாறு, செட்டிப்பட்டி, கோட்டையூர், பகுதிகளில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. செட்டிப்பட்டி, கோட்டையூர், பண்ணவாடி பரிசல் துறைகளில் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருவதால் காவிரி கரையில் பயிரிட்டு இருந்த பயிர்களை கிராம மக்கள் தங்களின் கால்நடைகளுக்கு தீவனத்திற்காக அறுவடை செய்து செல்கின்றனர். தொடர்ந்து அணைக்கு வரும் நீரின் அளவை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

The post ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 61 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 4 நாட்களில் 17.48 அடி உயர்வு appeared first on Dinakaran.

Related Stories: