வீட்டின் தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்து போதையில் மனைவியை அடித்து துன்புறுத்திய கணவன் கைது

*ஜோலார்பேட்டை அருகே பரபரப்பு

ஜோலார்பேட்டை : ஆந்திர மாநிலம் தச்ஷாராம் பகுதியைச் சேர்ந்தவர் சிவபிரசாத் (36). இவர் ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி பகுதியை சேர்ந்த ஜான்சி என்பவரை 10 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். பின்னர் இரு வீட்டார் சம்பதத்துடன் கடந்த 4 வருடங்களுக் முன்பு திருமணம் செய்து கொண்டனர். மேலும் சிவபிரசாத் ஏலகிரி மலையில் குடும்பத்துடன் தங்கி அங்கு தனியார் ஓட்டலில் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

தற்போது ஏலகிரி மலையில் இருந்து குடிபெயர்ந்து ஜோலார்பேட்டை அடுத்த இடையம்பட்டி பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகிறனர். இந்நிலையில் சிவப்பிரசாத் கஞ்சாவுக்கு அடிமை என தெரிகிறது. இதனால் கஞ்சா புகைத்து விட்டு போதை தலைக்கேறியதும் அவ்வப்போது தனது மனைவியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். மேலும், வசித்து வரும் வீட்டில் பின்புறம் ேதாட்டத்திலும், மாடியில் பூந்தொட்டியிலும் கஞ்சா செடி வளர்த்து வந்துள்ளார். கஞ்சா கிடைக்காத நிலையில் இந்த கஞ்சா செடிகளை பயன்படுத்தி அவ்வப்போது போதைக்கு அடிமையாகி கஞ்சா போதையில் மிதந்து வந்துள்ளார்.

இதனால் கணவன், மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஜான்சி ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் தனது கணவன் கஞ்சா செடி வளர்த்து வருவதாகவும், இந்த கஞ்சா செடிகளை பறித்து அவ்வப்போது பயன்படுத்தி போதை தலைக்கேறிய பின் தன்னை அடித்து துன்புறுத்தி வருவதாகவும் நேற்று புகார் அளித்தார். இதனையடுத்து, போலீசார் சிவபிரசாத்தின் வீட்டிற்கு சென்று வீட்டில் வளர்த்து வந்த இரண்டு கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர். மேலும் வழக்குபதிந்து சிவபிரசாத்தை கைது செய்து, திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post வீட்டின் தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்து போதையில் மனைவியை அடித்து துன்புறுத்திய கணவன் கைது appeared first on Dinakaran.

Related Stories: