உலக புகழ்பெற்ற பூரி ஜெகநாதர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: 2வது நாளாக நடந்த தேரோட்டத்தில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பு

பூரி: உலக புகழ்பெற்ற பூரி ஜெகநாதர் கோயிலில் 2வது நாளாக நடந்த தேரோட்டத்தில் லட்ச கணக்கான பக்தர்கள் திரண்டு பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஒடிசா மாநிலம் பூரி மாவட்டத்தில் 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஜெகநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஜூலை மாதம் நடக்கும் தேரோட்டம் உலக பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டும் கோலாகலமாக தொடங்கிய விழாவில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, ஒடிசா ஆளுநர், முதல்வர் மோகன் சரண் மாஜி, ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் தேரை வடம்பிடித்து இழுத்தனர். நேற்று சூரிய அஸ்தமனத்துக்கு பிறகு நிறுத்தப்பட்ட தேரோட்டம் இன்று அதிகாலை மீண்டும் துவங்கியது. சங்கு முழங்க ஜெய் ஜெகநாத் என்ற முழக்கம் விண்ணை முட்ட பிரதான பாதையில் தேர்களை பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்.

முன்னதாக நேற்று பூரி ஜெகநாதர் கோயிலில் இருந்து மூலவர் ஜெகநாதர், அவரது சகோதரர் பாலபத்ரா மற்றும் சூபத்ரா தேவி ஆகியோரின் மரச்சிலைகள் பிரமாண்டமான 3 தனித்தனி தேர்களில் வைக்கப்பட்டு இழுக்கப்பட்டன. வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்ட 3 தேர்களும் பூரி நகர வீதிகளில் அசைந்தாடி செல்லும் காட்சியை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இந்த 3 சிலைகளின் தெய்வங்களின் பிறப்பிடமாக கருதப்படும் கோயிலுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. பூரியில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளதால் போலீசார் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

The post உலக புகழ்பெற்ற பூரி ஜெகநாதர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: 2வது நாளாக நடந்த தேரோட்டத்தில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: