பிரிட்ஸ், காப் அரை சதம் தென் ஆப்ரிக்கா 189 ரன் குவிப்பு

சென்னை: தென் ஆப்ரிக்க மகளிர் அணியுடனான முதல் டி20 போட்டியில், இந்திய அணிக்கு 190 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீசியது. கேப்டன் லாரா வுல்வார்ட், டன்ஸிம் பிரிட்ஸ் இணைந்து தென் ஆப்ரிக்க இன்னிங்சை தொடங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 7 ஓவரில் 50 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தது. வுல்வார்ட் 33 ரன் (22 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி ராதா யாதவ் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். அடுத்து பிரிட்ஸ் – மரிஸன்னே காப் இணைந்து அதிரடியில் இறங்க, தென் ஆப்ரிக்க ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. அரை சதம் விளாசிய இருவரும் 2வது விக்கெட்டுக்கு 96 ரன் சேர்த்தனர்.

காப் 57 ரன் (33 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ராதா பந்துவீச்சில் சோபனாவிடம் பிடிபட்டார். குளோ டிரையன் 12 ரன்னில் வெளியேற, டன்ஸிம் பிரிட்ஸ் 81 ரன் (56 பந்து, 10 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். தென் ஆப்ரிக்கா 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 189 ரன் குவித்தது. நடின் டி கிளெர்க் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய பந்துவீச்சில் பூஜா வஸ்த்ராகர், ராதா யாதவ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 190 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. ஷபாலி வர்மா, ஸ்மிரிதி மந்தனா இணைந்து துரத்தலை தொடங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 56 ரன் சேர்த்தது. ஷபாலி 18 ரன்னில் வெளியேறினார்.

The post பிரிட்ஸ், காப் அரை சதம் தென் ஆப்ரிக்கா 189 ரன் குவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: