காஞ்சிபுரம் அருகே மாட்டுத்தொழுவமாக மாறிய நூலகம்: அதிகாரிகள் கவனிப்பார்களா?

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே கருப்படிதட்டடை ஊராட்சியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், படித்தவர்கள் அதிகம் உள்ளனர். இவர்களுக்காக கடந்த 2009-2010ம் ஆண்டு நூலகம் கட்டப்பட்டது. படித்தவர்கள், மாணவர்கள், இளைஞர்கள் என அனைவரும் பொது அறிவை வளர்த்துக்கொள்ளும்விதமாக தமிழ் அறிஞர்கள், கவிஞர்கள் எழுதிய நூல்கள் நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. தற்போது போட்டி தேர்வுகளுக்கான விழிப்புணர்வு அதிகரித்திருக்கும் நிலையில் நூலகம் சென்று பல்துறை புத்தகங்களை மாணவர்கள் படிக்க விரும்புகின்றனர்.

இந்நிலையில் கருப்படிதட்டடை ஊராட்சி நூலக முகப்பில் மாடுகளை கட்டி வைப்பதால் கழிவு மற்றும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நூலகத்திற்கு செல்வதை வாசகர்கள் தவிர்த்து வருகின்றனர். நூலகத்தில் தினசரி நாளிதழ்கள், பொது அறிவு புத்தகங்களை அதிகரிக்கவேண்டும். மேலும் நூலகம் தொடங்கப்பட்டதில் இருந்து புதிதாக புத்தகங்கள் வாங்கப்படவில்லை என கூறப்படுகிறது. தற்போதைய காலகட்டத்திற்கேற்ப மேம்படுத்தி புதிதாக புத்தகங்கள் வாங்கவேண்டும். சமீபத்திய தரவுகளுடனான பொதுஅறிவு புத்தகங்களை நூலகத்தில் அதிகப்படுத்த வேண்டும். நூலக முகப்பில் மாடுகள் கட்டப்படுவதை தடுத்து முறையாக பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post காஞ்சிபுரம் அருகே மாட்டுத்தொழுவமாக மாறிய நூலகம்: அதிகாரிகள் கவனிப்பார்களா? appeared first on Dinakaran.

Related Stories: