டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிபிஐக்கு எதிராக கெஜ்ரிவால் மனு

புதுடெல்லி: டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிபிஐக்கு எதிராக கெஜ்ரிவால் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு விவகாரம் தொடர்பாக, டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு எதிராக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியாக வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகிறது. கடந்த மார்ச் 21ல் கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால், தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவ்வழக்கில் கெஜ்ரிவாலுக்கு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய ஜாமீனுக்கு, டெல்லி உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இதற்கிடையே கெஜ்ரிவாலை கைது செய்த சிபிஐ, சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது.

அப்போது கெஜ்ரிவாலுக்கு வரும் 12ம் தேதி வரையில், அதாவது 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் புதியதாக மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ‘மதுபானக் கொள்கை முறைகேடு விவகாரத்தில் சிபிஐ விசாரணை அமைப்பு என்னை கைது செய்தது சட்டவிரோதம். எனவே சிபிஐயின் நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். இந்த மனுவானது டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஓரிரு நாளில் அவசர வழக்காக விசாரணைக்கு வரவுள்ளது.

 

The post டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிபிஐக்கு எதிராக கெஜ்ரிவால் மனு appeared first on Dinakaran.

Related Stories: