மகள் பேரில் நிலம் வாங்க முயன்றதால் தகராறு; மகனுடன் சேர்ந்து கணவனை அடித்துக்கொன்ற மனைவி

ஆத்தூர்: மகள் பேரில் நிலம் வாங்க முயன்றதால் தகராறில் மகனுடன் சேர்ந்து கணவனை மனைவி அடித்துக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே, வரகூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதிமூலம்(57). இவர், ஆத்தூர் மின்வாரியம் அலுவலகத்தில், ஒயர் மேனாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு வளர்மதி(47) என்ற மனைவியும், பவித்ரா என்ற மகளும், செல்வன்(19) என்ற மகனும் உள்ளனர். மகள் பவித்ரா கோவையில் வேலை பார்த்து வருகிறார். மகன் செல்வன் கல்லூரியில் இளங்கலை மூன்றாமாண்டு படித்து வருகிறார். ஆதிமூலத்திற்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது.

மதுப்பழக்கத்தால் அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், ஆதிமூலம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது மகள் பவித்ரா பேரில் 50 செண்ட் நிலம் வாங்க ஒப்பந்தம் போட்டுள்ளார். இதுதொடர்பாக மனைவி மற்றும் மகனுடன் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து, கடந்த ஒரு மாதமாக ஆதிமூலம், ஆத்தூரில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து அங்கு தங்கி வேலைக்கு சென்று வந்துள்ளார்.

கடந்த 21ம் தேதி தனது அக்காள் பார்வதியுடன் வீட்டிற்கு வந்த ஆதிமூலத்திற்கும், வளர்மதிக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கிருந்து வெளியேறிய ஆதிமூலம் நேற்று முன்தினம் வரகூரில் உள்ள தனது அக்காள் பார்வதி வீட்டில் தங்கினார். நேற்று காலை எழுந்ததும் தனது அக்காளிடம் ஆத்தூர் மருத்துவமனைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற ஆதிமூலம், தனது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, கணவன், மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில், ஆத்திரமடைந்த வளர்மதி, மகன் செல்வன் ஆகியோர் கட்டை மற்றும் இரும்புக் கம்பியால் சரமாரி தாக்கியுள்ளனர். பதிலுக்கு ஆதிமூலமும் தாக்கியுள்ளார். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அங்கு விரைந்தனர். அங்கு, ஆதிமூலம் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவரது மனைவி மற்றும் மகனும் தரையில் விழுந்து கிடந்தனர். தகவலறிந்த தலைவாசல் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று ஆதிமூலத்தை சடலமாக மீட்டனர். அவரது சடலத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், வளர்மதி மற்றும் செல்வன் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வளர்மதியும், செல்வமும் எவ்வாறு காயமடைந்தார்கள் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கொலையான ஆதிமூலத்தின் அக்கா பார்வதி கொடுத்த புகாரின்பேரில் தலைவாசல் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post மகள் பேரில் நிலம் வாங்க முயன்றதால் தகராறு; மகனுடன் சேர்ந்து கணவனை அடித்துக்கொன்ற மனைவி appeared first on Dinakaran.

Related Stories: