திண்டிவனம் அரசு கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டம்

திண்டிவனம், ஜூன் 20: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக் கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரியில் கடந்த ஆண்டு வரை பகுதிநேர வகுப்புகள் நடைபெற்ற நிலையில், தற்போது தமிழக அரசு பகுதி நேர வகுப்பறையை ரத்து செய்துவிட்டு முழு நேர வகுப்பு நடைபெறும் என அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இக்கல்லூரியில் 2007ம் ஆண்டு முதல் கல்லூரி இரு சுழற்சி முறையில் நடைபெறுகிறது. 13 துறையில் சுமார் 4500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கின்றனர். சுழற்சி முறையில் மாணவர்கள் அமர்வதற்கும் போதுமான மேசை வசதிகள், குடிநீர் வசதிகள், கழிவறை வசதிகள் மற்றும் பேருந்து வசதிகள் இல்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து பகுதி நேர வகுப்பறை வேண்டும் என கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்பு கல்லூரியின் முதல்வர் அலுவலக அறையின் எதிரிலும் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ரோஷணை போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததின்பேரில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் இந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

The post திண்டிவனம் அரசு கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: