வீடு புகுந்து நகை திருடியவர் கைது

பாப்பிரெட்டிப்பட்டி, ஜூன் 18: பொம்மிடி அருகே வீடு புகுந்து நகை திருடிய வாலிபரை, போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ஐந்தே கால் பவுன் நகை கைப்பற்றப்பட்டது. தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா, பொம்மிடி அருகே பி.துறிஞ்சிப்பட்டியைச் சேர்ந்தவர் ரங்கநாதன்(51). இவர் திருமண விழாக்களில் ஸ்டேஜ் டெகரேஷன் தொழில் செய்து வருகிறார். அவரது மைத்துனர், பாப்பிரெட்டிப்பட்டி மாயபஜார் பகுதியைச் சேர்ந்த பூவரசன்(19) என்பவர் உதவியாக இருந்தார். ரங்கநாதனின் தாயார் மாரியம்மாள், அப்பகுதியிலேயே தனியாக வசித்து வருகிறார். கடந்த 15ம் தேதி காலை வழக்கம்போல் மாரியம்மாள் கோயிலுக்கு சென்றார். பின்னர், வீடு திரும்பியபோது கதவு திறந்து கிடந்ததை கண்டு திடுக்கிட்டார்.

உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த ஐந்தே கால் பவுன் தங்க சங்கிலி மாயமாகியிருப்பதை கண்டு திடுக்கிட்டார். இதுகுறித்து அக்கம்- பக்கம் விசாரித்தபோது, பூவரசன் வீட்டிற்கு வந்து சென்றதாக தெரிவித்தனர். இதுகுறித்து ரங்கநாதன் கொடுத்த புகாரின்பேரில், பொம்மிடி போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் விக்னேஷ் வழக்குப்பதிந்து விசாரித்தார். இதில், பூவரசன் தங்க சங்கிலியை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து, பூவரசனை கைது செய்த போலீசார், தங்க சங்கிலியை கைப்பற்றினர்.

The post வீடு புகுந்து நகை திருடியவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: