மாமல்லபுரத்தில் சாலை விரிவாக்கத்திற்காக அகற்றப்பட்ட அரசு சிற்பக்கலை கல்லூரி மதில் சுவரை கட்ட வேண்டும்: விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் சாலை விரிவாக்கத்திற்காக அகற்றப்பட்ட அரசினர் கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலைக் கல்லூரி நுழைவு வாயில் முன்பு மதில் சுவரை கட்ட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மாமல்லபுரத்தில் இருந்து சென்னை செல்லும் இசிஆர் சாலையொட்டி, தமிழ்நாடு கலை பண்பாட்டு துறையின் கீழ் அரசினர் கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலை கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு, 280க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இங்கு சுதை சிற்பம், கற்சிற்பம், மரச்சிற்பம், ஓவியம் வரைதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் 4 ஆண்டுகள் பயிற்றுவிக்கப்படுகிறது. இசிஆர் சாலையை கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் பாதுகாத்து பராமரித்து வந்தது. மேலும், இசிஆர் சாலை 4 வழிச்சாலையாக விரிவுபடுத்தும் பணிக்காக மாமல்லபுரம் அரசினர் கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலைக் கல்லூரியில் இருந்து புதுச்சேரி வரை ஒன்றிய சாலை மேம்பாட்டு நிறுவனம் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, புதுச்சேரி வரை 4 வழிச் சாலையாக விரிவுபடுத்த முடிவெடுத்தது.

அப்போது, கல்லூரி மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மதில் சுவரையொட்டி சிவன் சிலை உள்ளதால், மதில் சுவரை இடிக்காமல் சாலை பணியை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆனால், கோரிக்கையை ஏற்காமல், டெண்டர் எடுத்த ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் கடந்த ஓராண்டுக்கு முன்பு சாலை பணிக்கு இடையூறாக இருந்த கல்லூரியின் நுழைவு வாயில் பகுதியில் உள்ள மதில் சுவரை இடித்து அகற்றியது.

மேலும், மதில் சுவர் இடித்து அகற்றப்பட்டு, ஓராண்டாகியும் மதில் சுவர் கட்டும் பணியை மேற்கொள்ளாமல் கல்லூரி திறந்த வெளியாக காணப்படுகிறது. இதை பயன்படுத்தி, அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கிக் கொண்டு, குடிமகன்கள் இரவில் வந்து அங்குள்ள மரத்தடியில் அமர்ந்து மது குடிப்பதாக கூறப்படுகிறது.

எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு நேரில் வந்து ஆய்வு செய்தும், மாணவர்களின் பாதுகாப்பை கருதியும் மாமல்லபுரம் அரசினர் கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலைக் கல்லூரி நுழைவு வாயில் முன்பு மதில் சுவர் கட்டும் பணியை விரைந்து தொடங்க வேண்டும் என கல்லூரி மாணவர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மாமல்லபுரத்தில் சாலை விரிவாக்கத்திற்காக அகற்றப்பட்ட அரசு சிற்பக்கலை கல்லூரி மதில் சுவரை கட்ட வேண்டும்: விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: